• Thu. Mar 28th, 2024

ஜல்லிக்கட்டு வழக்கில் என்னையும் மனுதாரராக சேர்க்க வேண்டும் வெங்கடேசன் எம்.பி. மனு

ஜல்லிக்கட்டு வழக்கில் என்னையும் மனுதாரராக சேர்க்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் வெங்கடேசன் எம்.பி. மனு தாக்கல் செய்துள்ளார்.
ஜல்லிக்கட்டு போட்டிகளை அனுமதிக்கும் தமிழக அரசின் அவசர சட்டத்தை ரத்து செய்யக்கோரி விலங்கு நல வாரியம், பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்துள்ளன. இந்த மனுக்கள் அரசியல் சாசன அமர்வு முன்பு வருகிற 23-ந்தேதி மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது. இதற்கிடையே மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் சுப்ரீம் கோர்ட்டில் இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- தமிழர்களின் கலாசாரத்தின் ஒரு அங்கமாக ஜல்லிக்கட்டு உள்ளது. காதலையும் வீரத்தையும் போற்றிப்பாடிய தொன்மையான தமிழ் இலக்கியங்களில் ஜல்லிக்கட்டு ஏறுதழுவுதல் எனும் பெயரில் இடம்பெற்றுள்ளது. ஸ்பெயின் போன்ற நாடுகளில் நடத்தப்பட்டு வரும் புல் பைட்டிங் எனும் மாட்டுச்சண்டை விளையாட்டுகள் பெரும்பாலும் வணிக நோக்கில் விளையாடப்படுகின்றன. ஆனால், ஜல்லிகட்டு
அப்படியில்லாமல் கலாசார நிகழ்வாக கடைபிடிக்கப்படுகிறது. இது உள்ளூர் கிராம நிர்வாகத்தால் மாவட்ட ஆட்சியர், வருவாய் அதிகாரிகள், கால்நடைத்துறை, மருத்துவர்கள் ஆகியோரின் மேற்பார்வையிலேயே நடத்தப்படுகிறது.
வெளிநாடுகளில் மாடுபிடி சண்டையில் மாடோ அல்லது மனிதரோ உயிரிழப்பது பொதுவானதாகவும், அந்த விளையாட்டின் ஓர் அங்கமாகவும் உள்ளது. ஆனால் ஜல்லிக்கட்டு கால்நடைகளின் வளத்தை உயர்த்தவும் ஜல்லிக்கட்டு நடத்தப்படும் கிராமங்கள், அதற்காக மாடுகளை வளர்க்கும் கிராமங்களின் பொருளாதாரத்தையும் உயர்த்துவதற்குமான ஆதாரமாக உள்ளது. ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளித்த அரசாணையால் நாட்டு மாடுகளின் இனப்பெருக்கம் மற்றும் தமிழர்களின் கலாசார பாரம்பரியம் பாதுகாக்கப்படுகிறது. போலோ போன்ற விளையாட்டுகளில் பயன்படுத்தப்படும் குதிரைகளுக்கு ஊக்கமருந்து கொடுக்கப்படுகிறது. ஆனால், ஜல்லிக்கட்டில் காளைகளுக்கு எந்த ஊக்க மருந்தும் கொடுக்கப்படுவதில்லை. மேலும் ஜல்லிக்கட்டானது ஒரு மதத்தைச் சார்ந்தவர்கள் மற்றும் பங்குபெறும் நிகழ்வாக இல்லாமல் தமிழர்கள் அனைவரும் பங்குகொள்ளும் கலாசார நிகழ்வாக உள்ளது.
ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் பாரம்பரிய மொழி, அறிவு, வாழ்க்கைமுறை, பழக்க வழக்கங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதையும் அடுத்த தலைமுறைக்கு அது கடத்தப்பட வேண்டும் என்பதையும் யுனெஸ்கோ வலியுறுத்துகிறது என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்கூறிய இக்காரணங்களை குறிப்பிட்டு ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு அனுமதி வழங்கும் சட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் தன்னையும் ஒரு மனுதாரராக இணைத்துக்கொள்ள வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *