வண்டலூர் அருகே உள்ள மண்ணிவாக்கம் பகுதியில், கடந்த சில நாட்களாக குரங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

தெருக்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் கூட்டமாக சுற்றித் திரியும் குரங்குகள், வீடுகளுக்குள் புகுந்து உணவுப் பொருட்களை சேதப்படுத்துவதுடன், பொதுமக்களை துரத்தும் சம்பவங்களும் அதிகரித்து வருவதாக குடியிருப்புவாசிகள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள், தனியாக நடந்து செல்லும் பெண்கள் மற்றும் முதியவர்கள் பாதுகாப்பு குறித்த அச்சத்தில் இருப்பதாகவும், குரங்குகள் திடீரென தாக்கும் அபாயம் இருப்பதால் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் வெளியே சென்று வருவதாகவும் கூறப்படுகிறது.
மேலும், வீடுகளின் மாடிகளில் உலர வைக்கப்பட்டுள்ள உணவுப் பொருட்கள் மற்றும் பழங்களை குரங்குகள் எடுத்துச் செல்வதுடன், வீட்டின் ஜன்னல் மற்றும் கதவுகளைத் திறந்து உள்ளே நுழையும் சம்பவங்களும் நடைபெற்று வருவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இந்த நிலை தொடர்ந்தால் உயிர் சேதம் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும், குரங்குகளை மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பாதுகாப்பாக பிடித்து வனப்பகுதிக்கு மாற்ற வனத்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மண்ணிவாக்கம் பகுதியில் நிலவி வரும் இந்த குரங்குகள் தொல்லைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் ஒருமித்த எதிர்பார்ப்பாக உள்ளது.





