மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தென்மாவட்டங்களில் நாளை முதல் தட்டம்மை தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் குமரிக்கடலில் உருவான கீழடுக்கு சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் டிசம்பர் 17, 18ம் தேதிகளில் பெய்த அதிகனமழை காரணமாக பெரும்பாலான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பல வீடுகளில் தண்ணீர் சூழ்ந்தது. மக்கள் தத்தளித்தனர். அங்கு இயல்பு நிலை படிப்படியாக திரும்பி வருகிறது. தன்னார்வலர்கள், தேசிய பேரிடர் மீட்பு படையினர், அரசு அலுவலர்கள் போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.
வெள்ள பாதிப்புக்குள்ளான தென்மாவட்டங்களில் உள்ள 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மற்றும் சிறார்களுக்கு நாளை டிசம்பர் 28ம் தேதி முதல் தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி செலுத்தப்படும் என பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் வெளியிட்ட செய்திக்குறிப்பில் ”கனமழையால் பாதிக்கப்பட்ட தென்மாவட்டங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன் தொடர்ச்சியாக 15 வயதுக்கு உட்பட்டோருக்கு தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நாளை டிசம்பர் 28ம் தேதி முதல் தொடங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்மாவட்டங்களில் மட்டும் மொத்தமாக 8 லட்சம் சிறார்களும், குழந்தைகளும் உள்ளனர். இதற்காக மத்திய அரசு 10 லட்சம் தவணை தட்டம்மை தடுப்பூசிகளை வழங்கியுள்ளது. எனவே, போதிய எண்ணிக்கையில் அவை கையிருப்பில் உள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.