சுதந்திரப் போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழர் வ.உ. சிதம்பரனார் 151வது பிறந்தநாள் விழா இன்று நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு கோவில்பட்டியில் வ.உ.சியின் கொள்ளுப்பேத்தி செல்வி அவரது வீட்டில் வ.உ.சி யின் திருவுரு படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார்.இதில் திரைப்பட தணிக்கைக்குழு முன்னாள் உறுப்பினருமான வழக்கறிஞர் முருகானந்தம், கபிலாஸ் போஸ், தமிழ் விவசாயிகள் சங்கத்தின் தலைவர் ஓ.ஏ.நாரயணசாமி, மாநில பொருளாளர் சுப்பாராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து அவர் வ.உ.சியின் கொள்ளுப்பேத்தி செல்வி செய்தியாளர்களிடம் பேசுகையில் கடந்த ஓராண்டாக வ.உ.சியின் 150வது பிறந்தநாளை தமிழக அரசு வெகு சிறப்பாக கொண்டாடியது, கடந்த ஆண்டு குடியரசு தின விழாவில் தமிழகத்தின் சுதந்திரப் போராட்ட தியாகிகள் வரலாற்று வாகனம் நிராகரிக்கப்பட்ட போதும் , தமிழகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் அதனை இடம்பெறச் செய்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு தங்களது குடும்பம் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். கடந்த சில ஆண்டுகளாக தென்னகத்தில் உள்ள சுதந்திரப் போராட்ட தியாகிகளின் தியாகங்கள் மறைக்கப்படுகிறது, மாற்றப்படுகிறது, புறக்கணிக்கப்படுகிறது.நாடாளுமன்ற வளாகத்தில் வ. உ. சி யின் வெண்கல சிலை நிறுவ வேண்டும், நாடாளுமன்ற நுழைவாயில் ஒன்றுக்கு அவர் பெயரை சூட்ட வேண்டும். வ.உ.சியின் பிறந்த தினமான செப்-5யை வழக்கறிஞர் தினமாக அறிவிக்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.சுதந்திரப் போராட்ட தியாகிகளின் தியாகங்களை நினைவுகூர்ந்து அவர்களது பிறந்தநாள் மற்றும் நினைவு நாளில் நினைவு மண்டபங்களை பராமரித்து சிறப்பாக விழா நடத்த வேண்டும் என்றார்.
இதையடுத்து தமிழ் விவசாயிகள் சங்கத் தலைவர் ஓ.ஏ. நாராயணசாமி கூறுகையில் வ.உ.சியின் நேரடி வாரிசுகள் புறக்கணிக்கப்பட்ட வருவதாகவும், சமீபத்தில் கூட தமிழக ஆளுநர் ரவி நடத்தி நிகழ்ச்சியில் நேரடி வாரிசுகள் அழைக்கப்படவில்லை என்றும்,இது வேதனை அளிக்கும் நிகழ்வு என்றும், தமிழக முதல்வர் வ. உ. சியின் நேரடி வாரிசுகளை அழைத்து கவுரவ படுத்த வேண்டும் என்றார்.