• Thu. Apr 25th, 2024

இசைப்புயலுடன் உதயநிதி திடீர் சந்திப்பு!

துபாயில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை, உதயநிதி ஸ்டாலின் திடீரென சந்தித்துள்ளார். இருவரின் சந்திப்பு புகைப்படம் இணையத்தில் வெளியாகி தற்போது டிரெண்டிங்கில் உள்ளது.

பாலிவுட்டில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘ஆர்ட்டிக்கள்-15’. இந்த திரைப்படம் ‘நெஞ்சுக்கு நீதி’ என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. போனி கபூர் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி நடித்து வரும் இந்த திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதில் உதயநிதி ஸ்டாலினுடன், தான்யா ரவிசந்திரன், சிவானி ராஜசேகர், சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இப்படத்தின் அனைத்துப்பணிகளும் முடிந்து இத்திரைப்படம் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது.

இந்த படத்துக்கு பிறகு மாரிசெல்வராஜ் இயக்கும் படத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கவிருக்கிறார். இப்படம் குறித்து நாளுக்கு நாள் புதுபுது தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்த படத்தில் பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் மற்றும் நடிகர் வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க விருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்க இருப்பதாகவும், நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் துபாயில் நடைபெற்று வரும் எக்ஸ்போ 2020 துபாய் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். இந்த இசை நிகழ்ச்சி ஜனவரி 20ம் தேதி தொடங்கி பிப்ரவரி 27ம் தேதி முடிவடைய உள்ளது.

எக்ஸ்போ 2020 ஜூபிலி மேடையில், விண்வெளி ஆய்வாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், ஃபிர்தௌஸ் இசைக்குழுவின் அறிமுக விழாவில், தனது குரலில் பாடி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார் ஏ.ஆர் ரஹ்மான்.

இதனிடையே, இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மானை துபாயில் உதயநிதி ஸ்டாலின் திடீரென சந்தித்து பேசினார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி டிரெண்டாகி வருகின்றன. மேலும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மாப்பிள்ளை சபரீசனும் உடன் இருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *