திருச்சி சிறப்பு முகாமிலிருக்கும் 15க்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்கள் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் பல்வேறு குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்டோர் மற்றும் வங்கதேசம், நைஜீரியா, சூடான், பல்கேரியா நாடுகளைச் சேர்ந்தவர்கள் 30 பேர் என 100க்கும் மேற்பட்டோர் உள்ளனர்.
தங்கள் மீது பொய் வழக்குகள் போடப்பட்டுள்ளதாகவும், தண்டனைக் காலத்திற்கு பிறகும் சிறப்பு முகாம் எனும் சிறையில் அடைத்து வைத்துள்ளதாகவும், ஜாமீன் கிடைத்தவர்களை கூட கைது செய்துள்ளதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. மேலும் கொரோனா காலத்திலாவது குடும்பத்தினரோடு சேர்ந்து வாழ அனுமதிக்க வேண்டும் என சிறப்பு முகாமில் உள்ள இலங்கைத் தமிழர்கள் கோரிக்கை விடுத்து, உண்ணாவிரத போராட்டத்தில் கடந்த மாதம் ஈடுபட்டு வந்தாக
தெரியவருகிறது.
சிறப்பு முகாமில் உள்ளவர்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்காமல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் பல கட்ட போராட்டங்களை முன்னெடுத்து பலனிக்காத நிலையில் திருச்சி சிறப்பு முகாமிலிருக்கும் 15க்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்கள் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். திக்சன் என்பவர் கழுத்தை அறுத்தும், ரமணன் என்பர் வயிற்று பகுதியை கத்தியால் கீறியும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது சிறைசாலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.