கோவையில் 100சதவீதம் வாக்குப்பதிவு வலியுறுத்தும் வகையில், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகள் கோலம் வரைந்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
கோவை மற்றும் பொள்ளாச்சி மக்களவை தொகுதிகளின் தேர்தல் அலுவலர்கள் கிராந்தி குமார் பாடி மற்றும் மோ.ஷர்மிளா ஆகியோர் பார்வையிட்டு தேர்தல் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் மற்றும் விழிப்புணர்வு வாசங்கள் ஒட்டப்பட்ட விசிறிகளை வழங்கினர். தொடர்ந்து நிகழ்வில் பங்கேற்ற அனைவரும் தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்த உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். மாவட்ட நிர்வாகம் சார்பில் தொடர்ந்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதன்படி மேட்டுப்பாளையம், ஜடையம் பாளையம் கிராமத்தில் ஜே.ஜே.நகர் பகுதியில் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் உறுதிமொழி ஏற்றனர். ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாதிரி வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது. மாணவ, மாணவிகள் பலர் பங்கேற்றனர். சூலூர் வட்டம் கண்ணம்பாளையம் கிராமத்தில் சந்தையில் பொது மக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.
மலைவாழ் மக்கள் வசிக்கும் கிராமமான புதுப்பதி கிராமத்தில் வள்ளி கும்மியாட்டம் மற்றும் ஒயிலாட்டம் நிகழ்ச்சிகள் நடத்தி தேர்தல் வாக்குப் பதிவு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.