அசாம் மாநிலத்தில், தண்டவாளத்தைக் கடந்த யானைகள் மீது ரயில் மோதியதில் இரண்டு யானைகள் பரிதாபமாக பலியானது.
இதுகுறித்து வடகிழக்கு ரயில்வே அதிகாரி கூறுகையில், “அசாம் மாநிலம் மோரிகான் மாவட்டத்தின் ஜாகிரோடு அருகே, நேற்று இரவு 10 மணியளவில் திப்ரூகர் நோக்கிச் சென்ற ராஜ்தானி விரைவு ரயில் சென்று கொண்டிருந்தது.அப்போது, தண்டவாளத்தைக் கடந்த யானைகள் மீது ரயிலின் இன்ஜின் பகுதி மோதியது. இதில், இரண்டு யானைகள் பலியானது. இந்த சம்பவத்தால் ரயில் போக்குவரத்து ஏதும் பாதிக்கப்படவில்லை” என்றார்.விபத்து குறித்து ரயில் ஓட்டுநர் கூறுகையில், “ரயிலின் இன்ஜின் பகுதி மோதியதில் இரண்டு யானைகள் விபத்துக்குள்ளானது. அதில் ஒரு யானை சம்பவ இடத்திலேயே பலியானது. மற்றொரு யானை பலத்த காயமடைந்திருந்தது. பின்னர், அந்த யானையும் உயிரிழந்தது தெரியவந்தது” என்றார். வன விலங்குகளின் நடமாட்டம் அதிகமுள்ள வனப்பகுதிகளுக்கு நடுவே செல்லும் ரயில்களால் தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவது அதிர்ச்சியடைய வைக்கிறது.
இதுபோன்ற விபத்துகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.