கமல்ஹாசன் கொரோனா பாதிப்பிலிருந்து முற்றிலும் குணமடைந்து விட்டதாக அவர் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது.
அண்மையில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்த கமல்ஹாசன் மருத்துவமனையில் தான் தனிமைப்படுத்திக் கொண்டதாக தெரிவித்திருந்தார்.
சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவரது உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளதாக ராமச்சந்திரா மருத்துவமனை அவ்வப்போது அறிக்கைகள் வெளியிட்டு வருகிறது.
இந்த நிலையில், கொரோனா பாதிப்பிலிருந்து கமல்ஹாசன் முற்றிலும் குணமடைந்து விட்டதாகவும், நாளை மறுநாள் வரை அவர் தனிமைப் படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், வருகிற 4ஆம் தேதி முதல் தனது வழக்கமான பணிகளை அவர் மேற்கொள்வார் எனவும் மருத்துவமனை தெரிவித்துள்ளது.