• Fri. Mar 13th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

இன்று காந்தவியல் கண்டுபிடிப்பாளர் ஆந்த்ரே-மாரி ஆம்பியர் நினைவு நாள்

ByKalamegam Viswanathan

Jun 9, 2023

மின்சாரத்திற்கும் காந்தவியலுக்கும் உள்ள தொடர்பை நிலைநிறுத்திய ஆந்த்ரே-மாரி ஆம்பியர் நினைவு நாள் இன்று (ஜூன் 10, 1836).

ஆந்த்ரே-மாரி ஆம்பியர் (Andre-Marie Ampere) ஜனவரி 20, 1775ல் பிரான்சின் லியோனில் பிறந்தார். சிறுவயதில் ஆம்பியரியரின் தந்தையே இலத்தீன் கற்றுக் கொடுத்தார். கணிதத்தில் நாட்டம் மிக்க ஆம்பியர் லியோனார்டு ஆய்லர், பெர்னோலி போன்றோரின் படைப்புக்களை படிக்க துணைபுரியுமென்று இலத்தீன் கல்வியைத் தொடர்ந்தார். பிற்காலத்தில் இதனால் ஆம்பியர் கணிதத்தில் மட்டுமன்றி வரலாறு, பயணங்கள், கவிதை, மெய்யியல், இயற்கை அறிவியல் ஆகியவற்றிலும் சிறந்து விளங்கினார். பிரெஞ்சுப் புரட்சி ஆண்டுகளில், ஆம்பியரின் தந்தையை புரட்சியாளர்கள் கொன்றனர். இது ஆம்பியர் மீது மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. 1796ல் லியோனில் அண்மையில் வசித்த வந்த கொல்லர் குடும்பத்தின் சூலி கேரோனைச் சந்தித்தார். சந்திப்பு காதலாக மாற, 1799ல் இவரைத் திருமணம் செய்து கொண்டார். இதன்பிறகு, ஆம்பியர் லியோனில் கணிதம், வேதியியல், மொழிகள் மற்றும் இயற்பியல் கற்பிக்கும் பேராசிரியராக வேலை செய்தார்.

ஆம்பியர் எழுதிய தன்வாழ்க்கை சரிதமான மடல்களும் பதிவேடும் (Journal et correspondence) அவரது குழந்தைத்தனமான பண்பையும் எளிமையையும் சித்தரிக்கிறது. ஆம்பியர் மின்சாரத்திற்கும் காந்தவியலுக்கும் உள்ள தொடர்பை நிலைநிறுத்தியதற்காக மிகவும் அறியப்படுகிறார். இவற்றை இரண்டையும் இணைத்து புதிய துறையாக மரபார்ந்த மின்காந்தவியல், அல்லது மரபார்ந்த இயக்க மின்னியலை நிறுவினார். செப்டம்பர் 11, 1820 அன்று ஆர்ஸ்டெட்டின் கண்டுபிடிப்பு மூலமாக காந்தமயமாக்கப்பட்ட ஊசியை மின்னோட்டத்தினால் தூண்ட முடியும் என அறிந்தார். இதற்கு ஒரு வாரத்திலேயே இத்தகைய பண்புக்கு மிக விரிவான மேம்பட்ட விளக்கத்தை வழங்கினார். அதேநாளில் ஒரேபோன்ற மின்மங்கள் எதிர்க்கின்றன என்பதையும் எதிரெதிர் மின்மங்கள் ஒன்றையொன்று கவர்கின்றன என்றும் கண்டறிந்தார். மின்னோட்டத்திற்கான அனைத்துலக முறை அலகு இவர் நினைவாக ஆம்பியர் எனப் பெயரிடபட்டுள்ளது.

1803ல் தமது மனைவியின் மரணத்திற்கு பிறகும் இதே வேலையில் நீடித்திருந்தார். இருப்பினும் மனைவியின் இழப்பு அவரை வாழ்நாள் முழுமையும் வாட்டியது. மின்சாரத்திற்கும் காந்தவியலுக்கும் உள்ள தொடர்பை நிலைநிறுத்திய ஆந்த்ரே-மாரி ஆம்பியர் ஜூன் 10, 1836ல் தனது 61வது அகவையில் பிரான்ஸ், மர்சேயில் இவ்வுலகை விட்டு பிரிந்தார். பாரிசிலுள்ள சிமெட்டியர் டெ மோன்மார்த்ரெயில் நல்லடக்கம் செய்யப்பட்டார்.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.