முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு விவகாரம் குறித்து உச்சநீதிமன்றத்தில் ஜோசப் புதிய பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளார். முல்லைப் பெரியாறு அணையில் விரிவான அளவுமானி கருவிகளை பொறுத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
கேரளாவை சேர்ந்த ஜாய் ஜோசப் என்பவர் முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பு, நீர் கசிவு தரவுகள், அணை ஆயுள் தொடர்பாக கேள்விகளோடு தாக்கல் செய்த மனு மற்றும் மத்திய அரசின் அணை இயக்க முறை நிலை அறிக்கை தொடர்பாக எழுப்பிய சந்தேகங்களுக்கும் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
அதில், முல்லை பெரியாறு அணை தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வருகிறது, மேலும் அணையில் எந்த விரிசல்களும் இல்லை என்பதை தொழில்நுட்ப குழு தெரிவித்துள்ளது. மேலும் ஒரு அணையின் ஆயுள் என்பது வரையறுக்கப்படவில்லை, ஆனால் அணையின் ஆயுள் என்பது அதன் பராமரிப்பு, புனரமைத்தல், புத்தாக்கம் உள்ளிட்ட நடவடிக்கையில் தான் உள்ளது என நிபுணர் குழு ஏற்கனவே தெரிவித்துள்ளது.
அதேபோல் அணையில் நிறுவப்பட்டுள்ள கண்காணிப்பு கருவிகள் செயல்பாட்டிலேயே தான் உள்ளன, அது பழுதாக இல்லை..அதை அணை பாதுகாப்பு கண்காணிப்பு குழு மற்றும் அதன் துணைக்குழு உறுதி செய்துள்ளது. மேலும் அணையில் மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைப்பு பணிகள் முடிந்தவுடன் ஏற்கனவே உள்ள பழைய தொழில்நுட்ப கருவிகள் மாற்றப்பட்டு புதிய கருவிகள் நிறுவப்படும், இது ஏற்கெனவே நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்ட ஒன்று என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்படுகிறது.