மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் பங்குனி உற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஏப்ரல் 9ஆம் தேதி நடைபெறவிருக்கும் முக்கிய நிகழ்வான தேர்திருவிழாவில் தேரினை இழுக்க வெற்றிலை, பாக்கு வைத்து கிராம மக்களை அழைப்பது வழக்கமாக நடைமுறையில் இருந்து வருகிறது.
அதனடிப்படையில் திருப்பரங்குன்றம் அருகே உள்ள பெருங்குடி, பரம்புபட்டி, வலையப்பட்டி, சம்பக்குளம், நிலையூர், கூத்தியார்குண்டு, தோப்பூர், வேடர் புளியங்குளம், தனக்கன்குளம், வடிவேல்கரை, கீழக்குயில்குடி, மேலக்குயில்குடி ஆகிய கிராமங்களுக்கு சென்று தேரினை இழுப்பதற்காக கிராம மக்களுக்கு வெற்றிலை, பாக்கு கொடுத்து அழைப்பு விடுக்கும் நிகழ்வு வருகின்ற 2 -ந்தேதி கோவிலில் இருந்து கோவில் முதல் ஸ்தானிகரும், முன்னாள் பேரூராட்சி தலைவருமான சுவாமிநாதன் தலைமையில் வைராவி, கணக்குப்பிள்ளை, நாட்டாண்மைகள், காவல்காரர்கள் ஆகியோர் அந்த கிராமங்களுக்கு நேரடியாக சென்று முக்கியஸ்தர்கள், நாட்டாண்மைகள் மற்றும் முதன்மைக்காரர்களை சந்தித்து வெற்றிலை, பாக்கு மற்றும் திருவிழா பத்திரிக்கை ஆகியவை தட்டில் வைத்து தேரினை இழுக்க வாருங்கள் என்று அழைப்பு விடுக்கிறார்கள்.