ஜி.ஏ.வடிவேலு காலமான தினம் இன்று!
ஆங்கிலேய அரசின் வருவாய்த் துறையில், எழுத்தராகப் பணியாற்றியவர் ஜி.ஏ.வடிவேலு. தர்மபுரி மாவட்டம் கொளஹள்ளியில், 1925 ஜூன் 12ம் தேதி பிறந்த இவர் காந்தியின் கொள்கையில் ஈர்க்கப்பட்டு, சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டார். அதற்காக, அரசு பணியை உதறினார். காங்கிரசில் இணைந்து, ‘தனிநபர் சத்தியாகிரகம், வெள்ளையனே வெளியேறு’ உள்ளிட்ட போராட்டங்களில் பங்கேற்றார்.நாட்டின் சுதந்திரத்திற்கு பின், ஜெயப்பிரகாஷ் நாராயணன் நிறுவிய சோசலிஸ்ட் கட்சியில் இணைந்து, அதன் பொதுச் செயலராக பணியாற்றினார்.விவசாயக் கூலிகளுக்காக நடந்த பல போராட்டங்களில் பங்கேற்று, சிறை வாசம் அனுபவித்தார். புதுச்சேரி சுதந்திர போராட்டத்திலும் பங்கேற்றார்.’சமுதாயம், புது வாழ்வு’ போன்ற நாளிதழ்களை நடத்தினார். 1977ல் ஜனதா தளம் கட்சியில் இணைந்து, தமிழக மாநிலத் தலைவராகவும், தேசிய பொதுச் செயலராகவும் பணிபுரிந்தார். 2002ல் மீண்டும் காங்கிரசில் இணைந்தார். எழுச்சி நாயகன் ஜி.ஏ.வடிவேலு காலமான தினம் இன்று!