ஆண்டிபட்டியில் திருவள்ளுவர் தினம் கொண்டாட்டத்தை முன்னிட்டு, இந்து முன்னணியினர் பொங்கல் வைத்து பொதுமக்களுக்கு முக கவசம் வழங்கினர்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் இந்து முன்னணி அமைப்பின் சார்பில், தெய்வப் புலவர் திருவள்ளுவரின் பிறந்த தின விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. அதனை முன்னிட்டு இந்து முன்னணி மாவட்ட செயலாளர் டாக்டர். எஸ் பி எம். செல்வம் தலைமையில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் மொக்க ராஜ், இந்து அன்னையர் முன்னணி மாவட்ட செயலாளர் ஜெயா ஆகியோர் முன்னிலையில் ஆண்டிபட்டி வைகை அணை சாலை பிரிவில் திருவள்ளுவரின் திருவுருவப்படத்திற்கு பொங்கல் வைத்து பூஜை செய்து வழிபாடு நடத்தப்பட்டது. தொடர்ந்து திருவள்ளுவருக்கு அமைப்பின் சார்பில் மலர் தூவி வணங்கி வழிபாடு நடந்ததோடு, திருவள்ளுவரின் புகழ் குறித்து பேசப்பட்டது!
இந்நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் மாநில பொறுப்பாளர் வழக்கறிஞர் கணேசன், பாஜக மாவட்ட பிரச்சார செயலாளர் கண்ணன், நகர செயலாளர் ராஜா, இந்து முன்னணி நிர்வாகிகள் மனோஜ் குமார், ஜெயபால், கனகராஜ், கருப்பையா, முனீஸ்வரன், பகவதி ராஜ்குமார், ராஜேஷ் ,வேலன், முத்துப்பாண்டி , இந்து அன்னையர் அமைப்பின் சார்பில் நிர்வாகிகள் ஜெயந்தி, சுந்தரி, நாகரத்தினம் மற்றும் ஆட்டோ முன்னணியினர் கலந்து கொண்டனர்.
இதனையடுத்து பொதுமக்களுக்கு பொங்கல் பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் முக கவசம் அணிந்து, சமூக விலகலை கடைபிடித்து கலந்து கொண்டனர். பொதுமக்களுக்கு அமைப்பின் சார்பில் முகக் கவசங்கள் வழங்கப்பட்டன. பாதசாரிகள் மற்றும் பேருந்துகளை நிறுத்தி பொங்கல் பிரசாதமும் முககவசமும் பயணிகளுக்கு வழங்கப்பட்டது .