தேனி மாவட்டம், லோயர் கேம்ப்பில் அமைந்துள்ள மணிமண்டபத்தில் முல்லை பெரியாறு அணையை கட்டிய, ஆங்கிலேய பொறியாளர் கர்னல் ஜான் பென்னி குவிக் 181வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது
மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்ட மக்களின் குடிநீர் தேவை மற்றும் விவசாயத்திற்கு முல்லை பெரியாறு அணை உறுதுணையாக இருந்து வருகிறது. இந்த அணையை கர்னல் ஜான் பென்னிகுவிக் என்ற ஆங்கிலேய பொறியாளர் கட்டினார். இந்த அணையை கட்டுவதற்காக தனது சொத்தை முழுவதும் இழந்தார். அவரது தியாகத்தை மக்கள் இன்றளவும் மறந்ததில்லை. இதற்கு நன்றி கடனாக தேனி மாவட்டம், லோயர் கேம்ப் அடிவாரத்தில் இவருக்கு முழு உருவச்சிலை அமைத்து மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது.
ஆண்டு தோறும் அவரது பிறந்த நாளில் (ஜன.15) இந்த மணிமண்டபத்தில் விவசாயிகள் பொங்கல் வைத்து, பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடுவது வழக்கம். இதன் காரணமாக லோயர் கேம்ப் பகுதி மக்கள் வெள்ளத்தில் களை கட்டி காணப்படும். தற்போது கொரோனா காலகட்டம் என்பதால், மக்கள் அதிகம் கூடுவதற்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் தடை விதித்துள்ளனர். இன்று கர்னல் ஜான் பென்னிகுவிக் 181வது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது சிலைக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் கலெக்டர் முரளீதரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் என பலரும் அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.