மயிலாடுதுறை அடுத்த திருவாலங்காடு மாதாகோவில் தெருவில் அமைந்துள்ள உலக மீட்பர் ஆலய 12 ஆம் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் கடந்த 15 ஆம் தேதி தொடங்கி இன்றுடன் 10 நாட்கள் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

இவ்விழாவில் மன்றாட்டு மாலை, நவநாள் ஜெபம்,திருப்பலி உள்ளிட்ட பல்வேறு வழிபாட்டு நிகழ்வுகள் நடைபெற்றன.இவ்விழாவின் முக்கிய நிகழ்வான சிறப்பு திருப்பலி மற்றும் திருத்தேர்பவனி இன்று நடைபெற்றது. குத்தாலம் பங்குத்தந்தை அருட்திரு ஜெர்லின் கார்ட்டர் அவர்களின் தலைமையில் முதலாவதாக நடைபெற்ற திருப்பலியில் உலக அமைதிக்காகவும்,இயற்கை சீற்றங்களிலிருந்து மக்கள் பாதுகாக்கப்படவும்,விவசாயம் செழிக்கவும்,சமத்துவம்,சகோதரத்துவம் நிலைத்திடவும் வேண்டி சிறப்பு பிரார்த்தனை வழிபாடுகள் நடைபெற்றன.
அதனைத் தொடர்ந்து இயேசுவின் திருஉருவம் தாங்கிய வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேர்பவனி நடைபெற்றது. ஆலய வளாகத்தில் இன்னிசை முழங்க, வானவேடிக்கையுடன் தொடங்கிய தேர்பவனி முக்கிய வீதிகள் வழியாக மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. இந்த திருப்பலி மற்றும் தேர்பவனி நிகழ்வுகளில் பங்கு மக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.