வைகைப்புயல் வடிவேலு நடிக்கும் ‘நாய் சேகர்’ படத்தின் தலைப்புக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
நகைச்சுவை நடிகர் வடிவேலு நீண்ட நாள்களுக்குப் பிறகு திரையில் மீண்டும் நடிக்க உள்ளார். வடிவேலுவின் ‘இம்சை அரசன்’ பஞ்சாயத்து ஒருவழியாக முடிவுக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து சுராஜ் இயக்கத்தில் தனது எவர்கிரீன் கதாபாத்திரமான ‘நாய் சேகர்’ என்ற தலைப்பிட்டுள்ள படத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில், ‘நாய் சேகர்’ தலைப்புக்கு இப்போது பிரச்சினை வந்துள்ளது.
நகைச்சுவை நடிகர் சதீஷ் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கிஷோர் இயக்கிவருகிறார். ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. ‘குக்கு வித் கோமாளி’ பவித்ரா சதீஷுக்கு ஜோடியாக நடிக்கிறார்.
இந்நிலையில், இந்தப் படத்திற்கு ‘நாய் சேகர்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்தத் தலைப்பு ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜாவிடம் இருந்ததாகவும், தற்போது இதனை சதீஷ் கேட்டுக்கொண்டதற்காக ஞானவேல்ராஜா ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு கொடுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்தத் தலைப்பை இயக்குநர் கிஷோர் முறைப்படி சங்கத்தில் பதிவுசெய்து-விட்டார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், வடிவேலுவின் படத்திற்கும் ‘நாய் சேகர்’ என்று பெயர் வைக்க பஞ்சாயத்து ஆரம்பமானது.