கோயம்பேடு காய்கறிச் சந்தையில் கந்துவட்டி கொடுப்பவரிடம் அடியாள் வேலை செய்கிறார் பிரபுதேவா. அநாதையான அவருடைய வாழ்வில் திடீரென நான் தான் உன் அம்மா எனச் சொல்லிக் கொண்டு ஈஸ்வரிராவ் வருகிறார்.இவ்வளவு வருடங்களாக அவர் எங்கிருந்தார்? அவர் வந்த பின் என்னவெல்லாம் நடக்கிறது? என்பதுதான் படம்.
பிரபுதேவாவுக்கு முற்றிலும் மாறுபட்ட வேடம். எந்நேரமும் முரட்டுத்தனமான முகத்துடன் விறைப்பாகவே திரிகிறார். ஈவு இரக்கமின்றி அவர் ஆட்களை அடிக்கும்போது நமக்கே பயமாக இருக்கிறது. வசனங்கள் அதிகம் இல்லாமல் இருப்பது அந்த வேடத்துக்குப் பலம் சேர்க்கிறது. தான் தோன்றித்தனமாக இருக்கும் அவர் வாழ்வில் அன்பு பாசம் ஆகியனவற்றிற்கு இடம் கிடைத்ததும் நடக்கும் மாற்றங்களையும் நடிப்பில் நன்றாகவெளிப்படுத்தியுள்ளார்.
அம்மாவாகநடித்திருக்கும் ஈஸ்வரிராவ் படத்துக்குப் பலம். அவர் யாரெனத் தெரியவரும்போது ஆச்சரியம் கலந்த அதிர்ச்சி. நன்றாக நடித்து வியக்கவைக்கிறார்.
நாயகியாக வரும் சம்யுக்தாஹெக்டே வுக்கு வித்தியாசமான வேடம். இளம்பெண்கள் செய்யத் துணியாத காரியத்தை அசால்ட்டாகச் செய்கிறார். பிரபுதேவா சும்மா இருக்கும்போது அவர்முன் ஆட்டம் போடுகிறார்.
யோகிபாபு அங்கங்கே சிரிக்க வைக்கிறார். சத்ரு, பரணி, மாரிமுத்து உள்ளிட்ட நடிகர்கள் அவரவர் பங்கைச் செய்துள்ளனர்.விக்னேஷ்வாசு ஒளிப்பதிவில் கோயம்பேடு சந்தை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் புதிதாகத் தெரிகின்றன.
சி.சத்யாவின் இடையில் பாடல்கள் நன்று, பின்னணி இசையில் உணர்ச்சிகரமான காட்சிகளுக்கு மேலும் உரமேற்றியிருக்கிறார். எழுதி இயக்கியிருக்கிறார் ஹரிகுமார்.கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் மட்டுமின்றி பண வியாபாரமும் நடக்கிறது என்பதை அம்பலப்படுத்தியதோடு அதனால் ஏற்படும் விளைவுகளையும் உள்ளம் அதிரச் சொல்லியிருக்கிறார்.
தயாரிப்பு : ஸ்டுடியோ கீரீன் இயக்கம்: ஹரிகுமார் நடிப்பு: பிரபுதேவா, சம்யுக்தா ஹெக்டே