தனியார் நிதிநிறுவனம் ஒன்றில் பணத்தை இழந்த வாலிபர் ஒருவர் தனது தற்கொலைக்கு காரணம் நிதிநிறுவனம்தான் என்றும், ஏமாந்தவர்களுக்கு பணத்தை திரும்பக் கொடுக்க வேண்டும் என கடிதம் எழுதி வைத்து விட்டு இறந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
வேலூரில் உள்ள குடியாத்தம் பகுதியில் பிரசாந்த் (39) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் இன்ஜினியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி தனலட்சுமி என்ற மனைவியும் ஒரு வயதில் ஆண் குழந்தையும் இருக்கிறது. இவர் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஒரு ஏஜென்ட் மூலம் ஐஎப்எல் என்ற ஒரு தனியார் நிறுவனத்தில் கடன் வாங்கி 24 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்துள்ளார்.
இந்த நிதி நிறுவனம் மூடப்பட்டதால் பிரசாந்துக்கு அவருடைய பணம் கிடைக்கவில்லை. பிரசாந்துக்கு கடன் கொடுத்தவர்களும் கடனை திரும்ப கேட்க ஆரம்பித்துள்ளனர். இதனால் மனம் உடைந்த பிரசாந்த் நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும் என்னுடைய மரணத்திற்கு காரணம் ஐஎப்எல் நிறுவனம்தான். அந்த நிறுவனத்தில் பணத்தை போட்டு ஏமாந்தவர்களுக்கு அவர்கள் பணத்தை திரும்ப கொடுக்க வேண்டும் என கடிதம் எழுதி வைத்துள்ளார். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.