புதுச்சேரியில் உள்ள ஒரு நகைக்கடையில் ஒருவர் மது குடிப்பதற்காக நகையை விழுங்கிய சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
புதுச்சேரி முத்தியால்பேட்டையைச் சேர்ந்தவர் வெங்கடாசலபதி. இவர் நெல்லுமண்டி சந்தில் நகைக்கடை வைத்துள்ளார். கடந்த 3ம் தேதி இரவு இவரது கடைக்கு 25 வயது வட மாநில இளைஞர் தங்க சங்கிலி வாங்க வந்திருப்பதாகக் கூறியுள்ளார். ஊழியர்கள் விதவிதமான தங்க நகைகளை எடுத்துக் காண்பித்துள்ளனர். ஒவ்வொன்றாக எடுத்து அவர் கழுத்தில் அணிந்து பார்த்தார். ஒவ்வொன்றாக பிடிக்கவில்லை எனக் கூறி வந்தவர், ஒரு கட்டத்தில் திடீரென 4 சவரன் தங்க சங்கிலியை தனது வாயில் போட்டு விழுங்கினார்.
அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் இளைஞரை பிடித்து தலைகீழாக குலுக்கியும் செயின் வெளியே வரவில்லை. வேறு வழியில்லாம் அவரை பெரிய கடை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர் ஒடிசாவை சேர்ந்த ராஜசேகர் சவுத் என்பது தெரியவந்தது. கூலி தொழிலாளியான இவர் சுற்றுலா வந்த போது பணம் முழுவதும் செலவாகியுள்ளது. மது குடிக்க பணம் இல்லாததால் நகைக்கடைக்குள் புகுந்து நூதன முறையில் நகையைத் திருடி சிக்கிக் கொண்டுள்ளார். இதை தொடர்ந்து அவரை அரசு மருத்துவமனையில் சேர்த்த போலீசார் 3 நாள் கழித்து எனிமா கொடுத்து நகையை மீட்டனர். சிகிச்சை முடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பெரிய கடை போலீசார் அவரை சிறையில் அடைத்தனர். சினிமா பாணியில் நகை திருட முயன்ற சம்பவம் நகைக்கடை அதிபர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.