தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி தலைவரும் தெலுங்கானா முதலமைச்சருமான சந்திரசேகர ராவ் தேசிய அரசியலில் தீவிரம் காட்டி வருகிறார். 2024 ஆம் ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் மத்தியில் ஆளும் பாஜகவிற்கு எதிராக எதிர்க்கட்சிகளை தமது தலைமையின் கீழ் ஒருகிணைக்கும் நடவடிக்கையில் அவர் தீவிரம் காட்டி வருகிறார். இதற்காக இன்று பாரத ராஷ்டிரிய சமிதி என்ற புதிய தேசிய கட்சியை அவர் தொடங்கி உள்ளார். ஐதராபாத்தில் உள்ள தெலுங்கானா பவனில் நடைபெற்ற விழாவில் கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
புதிய கட்சி தொடக்கத்தையொட்டி தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி தொண்டர்கள் ஐதராபாத்தில் பட்டாசுகளை வெடித்தும், இளஞ் சிவப்பு நிறத்தை தூவியும் கொண்டாடினர். முன்னதாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சந்திரசேகர ராவ், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள டெல்லி, மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தலில் அந்தந்த மாநில அரசியல் கட்சிகளுடன் கூட்டணி வைத்து தமது கட்சி போட்டியிடப்படும் என்று அவர் தெரிவித்திருந்தார்.