வேலூர் மாவட்டம் கூத்தம்பாக்கம் பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவரின் மகன் பிரவீன்குமார். ஒசூரில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.. இவர் அப்பகுதியிலுள்ள மகேந்திரன் என்பவருடைய துணிக்கடையில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக வேலை பார்த்து வருகின்றார். இந்நிலையில் மகேந்திரனின் மகள் சேத்தனா சவுத்ரி கல்லூரி படிப்பை முடித்துவிட்டு தனது தந்தைக்கு உதவியாக கடையில் இருந்து வந்துள்ளார். அப்போது சேத்தனா சவுத்ரிக்கும், பிரவீன் குமாருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் காதலுக்கு பெற்றோர் சம்மதிக்க மாட்டார்கள் என்பதால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி பிரவீன்குமாரின் சொந்த ஊரான கூத்தம்பாக்கம் கிராமத்திற்கு வந்தனர்.
இதனைத் தொடர்ந்து மகளைக் காணவில்லை என சேத்தனா சவுத்தரியின் பெற்றோர் தேடி வந்த நிலையில் இருவரும் முருகன் கோவிலில் முக்கிய பிரமுகர் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.
பின் இருவரும் பள்ளிகொண்டா காவல்நிலையத்தில் தஞ்சமடைந்து சேத்தனா சவுத்ரியின் தந்தையால் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக புகார் கொடுத்துள்ளனர். இந்த புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறையினர் பிரவீன் குமார் மற்றும் சேத்னா சவுத்ரியின் பெற்றோரை வரவழைத்து விசாரணை நடத்த உள்ளதாக தெரிவித்தனர்.