சூப்பர் ஸ்டார் ரஜினியைச் சந்தித்த சசிகலா, அடுத்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் பிரேமலதாவைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் சசிகலாவின் விடுதலை தமிழ்நாட்டு அரசியலில் பேசுபொருளானது. அப்போது, அவர் இனியும் அரசியலில் தொடரவேண்டுமா என்பது குறித்து விவாதங்களும் நடந்தன. அந்த நிலையில் ஜனவரி 24 ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொருளாளரும் விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா, “பெண் என்ற முறையில் சசிகலாவிற்கு எனது ஆதரவு உண்டு. சசிகலா விவகாரத்தில் அதிமுக நல்ல நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். தமிழக அரசியலில் சசிகலா பங்கேற்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். சசிகலாவினால் ஆதாயம் அடைந்தவர்கள் அவரை வேண்டாம் எனக் கூறுவது வருத்தம் அளிக்கிறது” என்று வெளிப்படையாக பேசினார். அதன் பின் அதிமுக கூட்டணியில் தேமுதிக தொடரவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.இந்த நிலையில்தான் சிறையில் இருந்து வெளியே வந்த உடனேயே தேமுதிக பொருளாளர் பிரேமலதா, சசிகலாவை சந்திக்கயிருக்கிறார் என்ற செய்திகள் பரவியது. ஆனால் சசிகலா அப்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பின் குணமாகி தனிமையில் இருந்ததால் எந்த சந்திப்பையும் மேற்கொள்ளவில்லை.
சசிகலா சென்னை வந்த பிறகு பலர் தி நகர் அபிபுல்லா வீட்டில் தங்கியுள்ள அவரை நேரடியாகச் சந்தித்து தங்கள் ஆதரவைத் தெரியப்படுத்தி வருகிறார்கள். சசிகலாவே சிலரை வீடுத் தேடிப்போய் சந்தித்து வருகிறார். அந்த வகையில் கடந்த டிசம்பர் 6ஆம் தேதி நடிகர் ரஜினிகாந்த்தை அவரது இல்லத்துக்குச் சென்று சந்தித்துவிட்டு வந்தார். இந்த நிலையில் அடுத்த கட்டமாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டுக்குச் சென்று விஜயகாந்த் உடல்நிலையை விசாரித்துவிட்டு, பிரேமலதாவை சந்தித்து அரசியல் ரீதியான ஆதரவு கேட்க சசிகலா தயாராகி வருவதாகக் சொல்கிறார்கள் சசிகலா ஆதரவாளர்கள்சசிகலாவின் இந்த அடுத்தடுத்த மூவ்கள் அதிமுக தலைமை நிர்வாகிகளை குழப்பத்தில் ஆழ்த்தி வருகிறது.