தீபாவளிக்கு இன்னும் ஒரு சில வாரங்களே உள்ள நிலையில் பொதுமக்கள் அனைவரும் பண்டிகைக்காக தயாராகி வருகிறன்றனர். அதேபோல் பல்வேறு இடங்களில் தங்கி வேலை செய்வோரும் தங்கள் ஊருக்கு சொல்ல ரயில் மற்றும் பேருந்துகளில் முன்பதிவு செய்து வருகின்றனர். பலர் தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் கொடுத்தும் டிக்கெட்களை முன்பதிவு செய்துவருகின்றனர்.
இந்நிலையில், மதுரை விமான நிலையத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் செய்தியாளர்களை சந்தித்த போது அவர், அரசு பேருந்துகளில் 2900 சிசிடிவி கேமராகள் பொருத்தும் பணி தற்போது சென்னை எம்டிசி-யில் நடைபெறுகிறது. பேருந்துகளில் தவறுகள் நடக்காமல் இருக்க சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்படும். இதைத் தொடர்ந்து விரைவில் தமிழகம் முழுவதும் உள்ள பேருந்துகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும்.
தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் குறித்து முறையான புகார்கள் வந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் பேருந்துகளுக்கு முதல்வர் உத்தரவுப்படி கட்டணம் நிர்ணயம் செய்துள்ளோம். அதை மீறி அதிக கட்டணம வசூலிக்கும் பேருந்துகளில் பெயர்களை குறிப்பிட்டு புகார் சொன்னால் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
மேலும், தீபாவளி நேர கூட்ட நெரிசலை தடுக்க பண்டிகை காலங்களில் மக்களின் தேவைக்கு ஏற்ப பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறினார்.