கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்று வரும் அதீத பணப்பட்டுவாடாவைத் தடுக்கத் தவறிய தேர்தல் அதிகாரிகளைக் கண்டித்து, அ.தி.மு.க வேட்பாளர் அம்மன் அர்ச்சுணன் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் அமர்ந்து ‘திடீர்’ தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளார்.

அவருடன் பா.ஜ.க மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் திரளாகப் பங்கேற்று உள்ளதால், ஆட்சியர் அலுவலகப் பகுதி பரபரப்பான சூழல் நிலவுகிறது.ஒரு ஓட்டுக்கு ஐயாயிரம் ரூபாய் வரை ரகசியமாக விநியோகிக்கப்படுகிறது” என அம்மன் அர்ச்சுணன் ஆவேசமாகக் குற்றம் சாட்டி உள்ளார். முறையாகப் புகார் அளித்தும் தேர்தல் அதிகாரிகள் மெத்தனப் போக்குடன் செயல்படுவதாகவும், இதனால் நேர்மையான முறையில் தேர்தல் நடைபெற வாய்ப்பில்லை என்றும் அவர் தெரிவித்தார். “உடனடியாக கோவை தெற்கு தொகுதி தேர்தலை நிறுத்தி வைக்க வேண்டும்” என்பதே போராட்டத்தின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.
போராட்டம் குறித்துத் தகவல் அறிந்த காவல்துறையினர், அம்மன் அர்ச்சுணன் மற்றும் நிர்வாகிகளுடன் சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இருப்பினும், “மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல் அதிகாரி நேரில் வந்து உரிய விளக்கம் அளிக்கும் வரை போராட்டத்தைக் கைவிட மாட்டோம்” என அவர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்து உள்ளனர்.ஆட்சியர் அலுவலக நுழைவாயிலிலேயே தர்ணா நீடிப்பதால், அங்குப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

வெளி மாவட்ட நபர்கள் (கரூர்க்காரர்கள்) தொகுதியில் தங்கிப் பணப்பட்டுவாடா செய்வதை அதிகாரிகள் தடுக்கவில்லை என்றும், சி.சி.டி.வி ஆதாரங்களுடன் புகார் அளித்தும், பறக்கும் படையினர் உரிய நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறார்கள். என்றும், தெற்கு தொகுதியில் வரலாறு காணாத அளவில் பண விநியோகம் நடைபெற்று வருவதாகப் கூறுகின்றனர்.தேர்தலுக்கு இன்னும் சில மணி நேரங்களே உள்ள நிலையில், ஒரு தொகுதியின் வேட்பாளரே தேர்தலை நிறுத்தக் கோரி ஆட்சியர் அலுவலகத்தில் அமர்ந்து இருப்பது பரபரப்பா ஏற்படுத்தி உள்ளது.



