நபீஹா மூவீஸ் புரொடக்ஷன் என்ற பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் நுபாயஸ் ரகுமான் தயாரித்துள்ள படம் ‘சக்கரை தூக்கலாய் ஒரு புன்னகை,
இந்தப் படத்தில் நாயகனாக ருத்ரா நடித்துள்ளார். மற்றும் சுபிக்சா, ராட்சசன் வினோத் சாகர், கணபதி, பீட்டர் ஹார்ட்லி, மகேஷ் பத்மநாபன், சுனந்தா ஆகியோரும் நடித்துள்ளனர்.
கதாநாயகிகளை நடிக்க ஒப்பந்தம் செய்யும்போது அக்ரிமெண்டில் பட புரோமோஷன்களுக்கு வருவோம் என்று கையெழுத்து போட்டாலும் பெரும்பாலும் அவர்கள் அதைக் கடைப்பிடிப்பதில்லை.இப்போது இது போன்று தயாரிப்பாளர்களை ஏமாற்றும் நடிகைகள் பட்டியலில் இந்தப் படத்தின் நாயகியான சுபிக்சாவும் சேர்ந்துள்ளார்.
இது குறித்து இந்தப் படத்தின் நாயகனான ருத்ரா பேசும்போது, “இந்தப் படத்தின் இசை வெளியீட்டிற்கு வருமாறு நாயகி சுபிக்சாவை, தயாரிப்பாளரும், இயக்குநரும், நானும் மாறி மாறி அழைத்தும் அவர் வரவில்லை. “நான் வெளியூரில் படப்பிடிப்பில் இருக்கிறேன்” என்று சொல்லி ஏமாற்றினார். இப்போது படத்தின் இசை வெளியீடு முடிந்து வருகின்ற 31-ம் தேதி படம் வெளியாக உள்ள நிலையில், இந்தப் படத்தின் புரமோஷன்களில் கலந்து கொள்ள வருமாறு நாங்கள் பல முறை கூறியும் சுபிக்சா வர மறுக்கிறார்.அவருக்கு எந்தவொரு சம்பள பாக்கியும் இதுவரை வைக்கவில்லை.
இருந்தும் இதுபோல் நடந்து கொள்கிறார். அவருக்கு என்ன பிரச்சனை என்று தெரியவில்லை.இது சம்பந்தமாக நாங்கள் நடிகர் சங்கத்தில் புகார் அளிக்க போகிறோம். இந்தப் படத்தை உருவாக்க நாங்கள் அவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறோம். அதன் பலனாக 8 விருதுகளும் வாங்கியுள்ளது எங்களது படம். இருந்தும் படத்தின் நாயகி வராதது எங்களுக்குப் பெருத்த ஏமாற்றமும் அவமானமுமாக இருக்கிறது என்றார்.