உயிர் பிழைத்து விடுவான் என்ற மூட நம்பிக்கையில் உயிரிழந்த சிறுவன் உடலை உப்புகுவியலுக்கு வைத்த கொடூரம் சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது.
கர்நாடக மாநிலம், பெல்லாரி மாவட்டம் சிரவாரா கிராமத்தை சேர்ந்தவர் சேகர். இவருடைய மனைவி கங்கம்மா. இந்த தம்பதியின் மகன் பாஸ்கர் (10). இவர், நேற்று காலை வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தார்.அப்போது, அப்பகுதியில் உள்ள பள்ளத்தில் தேங்கியிருந்த தண்ணீரில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்துள்ளார். இதில் அவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்.இந்நிலையில், விளையாடச் சென்ற தங்கள் மகன் வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் அவரை பெற்றோர் தேடியபோது, தண்ணீர் தேங்கிய குழியில் பிணமாக மிதப்பதைக் கண்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
அப்போது, ‘தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தவர்கள் மீது சமையலுக்கு பயன்படுத்தும் உப்பை குவியலாக கொட்டி வைத்தால் 2 மணி நேரத்தில் உயிர் பிழைத்து விடுவார்கள்’ என்று முகநூலில் ஒரு பதிவை படித்தது சேகருக்கு நினைவுக்கு வந்துள்ளது.இதையடுத்து அவர், பாஸ்கர் உடலை கீழே கிடத்தி, உப்பை குவியலாக கொட்டினார். ஆனால், 8 மணி நேரம் ஆகியும் பாஸ்கர் உயிர் பிழைக்கவில்லை. இதன்பின்னர் பாஸ்கரின் உடல் உப்பு குவியலில் இருந்து எடுக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
உயிரிழந்த சிறுவன் உடல் மீது உப்பை குவியலாக கொட்டி வைத்திருந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியது. இதையடுத்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.