அதிமுக ஒருங்கிணைப்பாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி இன்று காலமானார். இவர் கடந்த ஒரு வாரமாக குடல் இறக்க பிரச்சனை காரணமாக பெருங்குடியில் உள்ள ஜெம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று காலை சிகிச்சையின் போது மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 63. ஓ.பி.எஸ். மனைவியின் திடீர் மறைவு அதிமுக தொண்டர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் மீளா துயரில் ஆழ்த்தியுள்ளது.
பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் பெருங்களத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். ஓபிஎஸ் மனைவி அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். அதன் பின்னர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் குடும்பத்திரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து வி.கே.சசிகலா, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மருத்துவமனைக்கே சென்று நேரில் ஆறுதல் தெரிவித்தனர்.
இதனையடுத்து ஓபிஎஸ் மனைவி விஜயலட்சுமியின் உடலை மருத்துவமனை நிர்வாகம் உறவினர்களிடம் ஒப்படைத்தது. இதனைத் தொடர்ந்து குளிரூட்டப்பட்ட ஆம்புலன்ஸ் மூலமாக ஓபிஎஸ் மனைவியின் உடல் தேனி எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு பெரியகுளத்தில் உறவினர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ள விஜயலட்சுமியின் உடல், நாளை அங்கேயே நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.