• Thu. Apr 25th, 2024

சென்னை மக்களை அதிர வைத்த கலப்பட எண்ணெய் குடோன்..!

Byவிஷா

Aug 24, 2022

சென்னையில் கலப்பட எண்ணெய்க்கென தனிக்குடோன் இருப்பதைக் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை மேற்கு மாம்பலம் பிள்ளையார் கோயில் தெருவில் உள்ள பிரபல ஆயில் விற்பனை கடையான ஸ்ரீ மாலையம்மன் ஆயில் ஸ்டோர்ஸில் கலப்பட எண்ணெய் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் அடிப்படையில், அதிகாரி சதிஷ்குமார் தலைமையிலான குழுவினர் திடீர் சோதனை நடத்தினர்.
கடையில் சோதனை செய்த போது பூமிக்கடியில் தனியாக தொட்டி ஒன்று கட்டி அதில் உணவு சமைக்கும் எண்ணெயை சேமித்து விற்பனை செய்தது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அதிகாரி சதிஷ்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது:
“மேற்கு மாம்பலத்தில் உள்ள ஸ்ரீ மாலையம்மன் ஆயில் ஸ்டோர்ஸில் கலப்பட எண்ணெய் விற்கப்படுவதாக எங்களுக்கு தகவல் கிடைத்ததன் பேரில் அங்கு சோதனைக்கு சென்றபோது தொட்டி போன்று அமைத்து அதில் சன் பிளவர் மற்றும் பாமாயிலை அவர்கள் கலந்து வைத்து விற்பனை செய்து உள்ளனர். அங்கிருந்து சன் பிளவர் எண்ணெய் ஆயிரம் லிட்டர், பாமாயில் முவாயிரத்து நானூறு லிட்டர் என மொத்தம் 4,400 கெட்டுப்போன எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த கடை முறையான அனுமதியின்றி நடத்தப்பட்டுள்ளது. விற்பனையாளர்கள் இதுபோன்ற தவறை செய்ய வேண்டாம்” என்று இவ்வாறு கூறினார்.
அதோடு சென்னையில் உள்ள உணவகங்கள், ஜூஸ் பார்லர்கள், கடைகள் உள்ளிட்ட இடங்களில் தரமற்ற உணவு பொருட்கள் விற்பனை செய்வது தெரியவந்தால் 94440 42322 என்ற செல்போன் எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலம் வீடியோ, புகைப்பட ஆதாரங்களை அனுப்பி தகவல் தெரிவிக்கலாம் என்றும் சதீஷ்குமார் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *