• Mon. May 6th, 2024

நடனமாடி கிரிவலம் வந்த பள்ளி மாணவியின் சாதனை

Byவிஷா

Feb 24, 2024

500 ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமர் நரேந்திரமோடி அயோத்தியில் ராமர் கோவில் கட்டியதை வரவேற்கும் விதமாகவும், உலக மக்களின் நன்மைக்காகவும் 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் நடனம் ஆடியபடியே கிரிவலம் வந்து சாதனை படைத்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன். அப்பளம் வியாபாரம் செய்கிறார். இவரது மனைவி தேவிபாலா. நடன பயிற்சி ஆசிரியராக உள்ளார். இவர்களது மகள் ஹரிணிஸ்ரீ திருக்கோவிலூர் பகுதியில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
கடந்த ஆறு ஆண்டுகளுக்கு மேலாக பரதநாட்டிய பயிற்சியில் ஈடுபட்டு வரும் அரசு பள்ளி மாணவி ஹரிணிஸ்ரீ நேற்று திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்து 14 கிலோமீட்டர் கிரிவலப் பாதையில் பரதநாட்டியம் ஆடியபடியே கிரிவலம் மேற்கொண்டார். குறிப்பாக 500 ஆண்டுகளுக்குப் பிறகு அயோத்தியில் பாரத பிரதமர் மோடி ராமர் கோவில் கட்டியதை வரவேற்கும் விதமாகவும், உலக மக்களின் நன்மைக்காகவும் 14 கிலோமீட்டர் பரதநாட்டியம் ஆடியபடி கிரிவலம் மேற்கொண்டார்.
திருவாசகம், திருப்புகழ், சிவபுராணம், தேவாரம் உள்ளிட்ட பாடல்களுக்கும், 17 அடவுகள் மற்றும் 64 வகையான முத்திரைகள் பயன்படுத்தி மல்லாரி வகை பரதநாட்டியத்தை அரசு பள்ளி மாணவி ஹரிணிஸ்ரீ 14 கிலோமீட்டர் கிரிவலப்பாதையில் ஆடியபடி கிரிவலம் மேற்கொண்டது அனைவரையும் கவர்ந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *