தமிழகத்தைச் சேர்ந்த ஆசிரியர் ராமச்சந்திரன் உட்பட 46 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருதை ஜனாதிபதி திரௌபதி முர்மு வழங்கினார்.
இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் இராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் மாதம் 5-ம் தேதி (இன்று) ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில், அவரை கவுரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டு வருகிறது
அந்த வகையில், இந்த ஆண்டு தமிழகத்தைச் சேர்ந்த ஆசிரியர் ராமச்சந்திரன், புதுச்சேரியை சேர்ந்த அரவிந்த் ராஜா உட்பட 46 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், டெல்லியில் உள்ள விஞ்ஞான பவனில் நல்லாசிரியர் விருது வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் ஆசிரியர்களுக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு விருதுகளை வழங்கி கவுரவித்தார்.தமிழகத்தை சேர்ந்த ஆசிரியர் ராமச்சந்திரன் பள்ளி சீருடை அணிந்து வந்து நல்லாசிரியர் விருதை பெற்றுக்கொண்டார். இவர், ராமநாதபுரம் மாவட்டம் கீழாம்பல் ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பணியாற்றி வருகிறார்.