சென்னை புறநகர், மணலியில் உள்ள ரசாயன குடோனில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதி முழுவதும் பரபரப்பும், அதிர்ச்சியும் ஏற்பட்டுள்ளது.
சென்னையின் புறநகர்ப்பகுதியான மணலியில் வாயக்காடு என்ற இடத்தில், ரசாயன குடோன் ஒன்று செயல்பட்டு வருகிறது.இந்த குடோன் தனியாருக்கு சொந்தமானது. இங்கு இன்று அதிகாலை 1 மணிக்கு திடீர் தீ விபத்து ஏற்பட்டது. குடோனில் தங்கியிருந்த ஊழியர்கள், குடோனில் தீ பற்றியதும் அலறியடித்து வெளியே ஓடிவந்து தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தந்தனர்.
இதன் பேரில் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் 50க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்க போராடினர். அதற்குள் மளமளவென தீ கொழுந்துவிட்டு எரிய தொடங்கிவிட்டது. தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. இதனையடுத்து ராட்சத தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு, மீண்டும் தீயை அணைக்க வீரர்கள் முயற்சித்தனர். தண்ணீர் பற்றாக்குறையால் மெட்ரோ லாரிகளில் தண்ணீர் கொண்டுவரப்பட்டு, தீயை கட்டுக்குள் கொண்டுவர வீரர்கள் போராடி வருகிறார்கள்.
இதனால் அந்த பகுதி முழுவதுமே அடர்ந்த கரும்புகையால் சூழப்பட்டுள்ளது. 100 அடி உயரத்துக்கும் மேலே கொழுந்துவிட்டெறிந்து கொண்டிருக்கும் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. அந்த பகுதியில் காலையிலேயே கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கரும்புகை சூழ்ந்துள்ளதால், அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பும், அதிர்ச்சியும் ஏற்பட்டுள்ளது.