திருநள்ளாறு பகுதியைச் சேர்ந்த சிற்பி ராமகிருஷ்ணன், சிறுவயதிலிருந்தே சிற்பக்கலையில் ஆழ்ந்த ஆர்வம் கொண்டு மகாபலிபுரம் சிற்பக் கல்லூரியில் டிப்ளமோ முடித்தார்.

கன்னியாகுமரியில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலையை வடிவமைத்த புகழ்பெற்ற ஸ்தபதி கணபதி ஸ்தபதியின் சீடரான இவர், புதுச்சேரி அரசு மாவட்ட தொழில் மையத்தின் மூலம் பலருக்கு சிற்பக்கலைப் பயிற்சி அளித்துள்ளார்.
சிற்பத் துறையில் சிறந்து விளங்கிய ராமகிருஷ்ணன், 1990 ஆம் ஆண்டு இந்திய குடியரசுத் தலைவர் அவர்களிடம் தேசிய விருதையும், 2010 ஆம் ஆண்டு புதுச்சேரி கலைமாமணி விருதையும் பெற்றார். இந்திய அரசின் சார்பில் பல்வேறு நாடுகளில் சிற்பக்கலை குறித்த செய்முறை விளக்கங்களை வழங்கியுள்ளார்.

தேசிய விருது பெற்ற கலைஞர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சியில், புதுச்சேரி அரசு சார்பில் தலா ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. இதற்காக புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் அமைச்சர் ஜி.என்.எஸ் ராஜசேகரன் ஆகியோருக்கு சிற்பி ராமகிருஷ்ணன் நன்றி தெரிவித்தார்.





