சென்னை திருவான்மியூரில் உள்ள மகளிர் விடுதிக்குள், ரேபிடோ டிரைவர் புகுந்து தங்கச்செயினைப் பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் திருவான்மியூரில் பெண்கள் தங்கும் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு இந்தியா முழுவதிலும் இருந்து ஏராளமான பெண்கள் தங்கி படித்தும், பணிபுரிந்தும் வருகின்றனர். இதில் வடமாநில பெண் ஒருவர் நேற்று வெளியே சென்றுவிட்டு ஹாஸ்டலுக்கு ரேபிடோ பைக்கை புக் செய்தார். ரேபிடோவில் ஓட்டுனராக விக்னேஷ் வந்து அந்த இளம்பெண்ணை ஏற்றிக் கொண்டு திருவான்மியூரில் உள்ள விடுதிக்கு சென்று அங்கு அவரை இறக்கிவிட்டார்.
பிறகு காசை வாங்கிக் கொண்டு திரும்ப வேண்டிய விக்னேஷ் திடீரென அந்த விடுதிக்குள் புகுந்துவிட்டார். வடமாநில பெண்ணிடம் இருந்து செல்போன், பணத்தை பறித்தார். மேலும் பாலியல் தொல்லை கொடுத்து அவருடைய தங்க செயினையும் பறித்தார். அந்த பெண் கத்தி கூச்சலிட்டதால் ரேபிடோ ஓட்டுனர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இச்சம்பவம் குறித்து காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அந்த நபரின் ரேபிடோ புக்கிங் தகவல்களை வைத்து கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஏற்கனவே ரேபிட்டோ செயலிகளை முடக்க வேண்டும் என ஊபர், ஓலா டிரைவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இதுபோல் திருட்டுச் சம்பவத்தில் ரேபிடோ ஓட்டுநர் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.