ராமநாதபுரம் மாவட்டம் கீழபருத்தியூர் ஊராட்சிக்குட்பட்ட புலவர் வேலாங்குடியில் வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமி கோவில் மலேசியா வாழ் தமிழ் உறவுகள், புலவர் வேலாங்குடி கிராம மக்களால் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடு செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கடந்த மார்ச் 9ம் தேதி கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜை, விக்னேஷ்வர பூஜை, சோடச மகா கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம்,கோ பூஜையுடன் தொடங்கியது. நேற்று இரவு, 9:30 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜை முடிந்து இன்று காலை 11:30 மணியளவில் சுப்ரமணிய சுவாமி மற்றும் வளாகத்தில் உள்ள பால விநாயகர், ஸ்ரீராஜராஜேஸ்வரி, ஸ்ரீதுர்க்கை, ஸ்ரீலிங்கோத்பவர், ஸ்ரீதெட்சினாமூர்த்தி, ஸ்ரீஇடும்பன் ஆகிய பரிவார சுவாமிகளுக்கும், விமான கோபுர கலசத்திற்கும் மற்றும் சால கோபுரங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.
கோவில் டிரஸ்ட்டி சிவா தலைமையில் , கிராம முக்கியஸ்தர்கள் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பரமக்குடி எம்எல்ஏ முருகேசன் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்.
சிவாச்சாரியர்கள் கலந்து கொண்டு அரோகர கோஷம் விண்ணைப் பிளக்க, மேள தாளங்கள் மற்றும் மங்கள இசையுடன் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
மேலும் கும்பாபிஷேகம் முடிந்த பின் மஹா தீபாராதனைப் பின் விபூதி பிரசாதம் வழங்கப்பட்டு அன்னதானம் நடைபெற்றது.