சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, குழந்தைகள் மற்றும் பெண்களிடையே யோகா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், யோகா பார் யூ வெல்னஸ் மையம் சார்பில் நோவா உலக சாதனை அதிகாரப்பூர்வ முயற்சி சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் குழந்தைகள் மற்றும் பெண்கள் இணைந்து 26 வகையான விலங்கு யோகாசனங்களை செய்து உலக சாதனை முயற்சியில் பங்கேற்றனர்.

இந்த நிகழ்வை டாக்டர் ரோஸ்லின் கலைமதி மற்றும் திரு. டி. தங்கராஜ் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களிடம் சிறந்த ஆசிரியர் விருது பெற்ற திருமதி எஸ். கலாநிதி தலைமை விருந்தினராக கலந்து கொண்டு, யோகாவின் அவசியம் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையில் அதன் பங்கு குறித்து சிறப்புரையாற்றினார்.
நோவா உலக சாதனை அமைப்பின் இணை இயக்குநரும், செயலாளருமான திலீபன் நடுவராக பங்கேற்று, உலக சாதனை முயற்சியை அதிகாரப்பூர்வமாக அறிவித்ததுடன், சாதனையில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வழங்கினார்.
மேலும், “ஆரோக்கியமான முதுமைக்கு யோகா” மற்றும் “உங்கள் வாழ்வில் யோகா” என்ற இந்தாண்டு சர்வதேச யோகா தினக் கருத்தை வலியுறுத்தி சிறப்புரைகள் நிகழ்த்தப்பட்டன.
நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக, 5 வயது சிறுமி ஒருவர் உபவிஷ்ட கோணாசனம் எனும் ஆசனத்தை தொடர்ந்து 10 நிமிடங்கள் செய்து பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றார். இறுதியாக, உலக சாதனை முயற்சியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டு நிகழ்ச்சி சிறப்பாக நிறைவடைந்தது.



