• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

அதிகாரிகள் மீது கல்வீச்சு…. போலீஸ் தடியடி!

ByKalamegam Viswanathan

Jun 27, 2023

மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா மேலப்பட்டி கிராமத்தில் வி.சி.க கொடி கம்பம் மற்றும் அம்பேத்கர் கொடிக்கம்பம், இந்த கொடி கம்பம் ஆனது நீரோடை ஆக்கிரமிப்பு பகுதியில் கடந்த 20 வருடங்களுக்கு முன்னால் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. அரசுக்கு சொந்தமான நீரோடை பகுதியில் கொடிக்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளதால் அதனை அகற்ற கடந்த பல வருடங்களாக வருவாய்த் துறையினர் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினர் முயற்சி செய்து வந்துள்ளனர். கிராம மக்கள் அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் அகற்ற முடியவில்லை. இந்த நிலையில் நீதிமன்றத்தில் வழக்கு பதியப்பட்டு விசாரணைக்கு பின்பு கொடிக்கம்பங்களை அகற்ற நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் கொடிக்கம்பங்களை அகற்ற உள்ளதாக பேரையூர் தாசில்தார் மற்றும் டீ .கல்லுப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் ஆசிக் ஆகியோர் கிராம மக்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதனை அடுத்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. இதன் அடிப்படையில் பேரையூர் டி.எஸ்.பி. இலக்கியா மற்றும் ஏ.டி.எஸ்.பி கமலக்கண்ணன் தலைமையில் 200 போலீசார் குவிக்கப்பட்டனர். தொடர்ந்து ஆக்கிரமிப்பு அகற்ற பேரையூர் தாசில்தார் ரவிச்சந்திரன் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆஷிக் தலைமையில் வருவாய் துறையினர் மேலப்பட்டி கிராமத்திற்கு சென்றுள்ளனர்.

இந்த நிலையில் அம்பேத்கர் கொடி கம்பம் மற்றும் வி.சி.க. கட்சி கொடி கம்பத்தை அகற்றக் கூடாது என கூறி 200க்கும் மேற்பட்டோர் ஆக்கிரமிப்பு அகற்ற வந்த அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது திடீரென கிராம மக்கள் காவல் துறையினர் மற்றும் வருவாய் துறையினர் மீது கற்களை கொண்டு திடீரென தாக்குதல் நடத்தினர்.

இதனை அடுத்து காவல்துறையினர் கிராம மக்கள் மற்றும் கட்சியினர் மீது தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து பேரையூரில் உள்ள தனியார் மண்டபத்தில் அடைத்தனர். தொடர்ந்து வருவாய் துறையினர் ஆக்கிரமிப்பில் அமைந்திருந்த கொடி கம்பங்களை அகற்றினர்.

ஆக்கிரமிப்பை அகற்ற வந்த அரசு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கற்களை கொண்டு தாக்கியதால் காவல்துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.