• Wed. Feb 12th, 2025

சிதம்பரம் நடராஜர் கோவில் கோபுரத்தில் சிலைகள் சேதம்

Byவிஷா

Dec 14, 2024

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், சிதம்பரம் நடராஜர் கோவில் கோபுரத்தில் சிலைகள் சேதமடைந்து காணப்படுகிறது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கடந்த சில நாட்களாகவே பல மாவட்டங்களிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் சிதம்பரத்தில் கடந்த 2 நாட்களாக கன மழை பெய்து வரும் நிலையில் உலக பிரசித்திபெற்ற நடராஜர் கோயிலின் மேற்கு கோபுரத்தில் 2ம் அடுக்கில் இருந்த 2 துவாரக பாலகர் சிலைகளும், மற்றொரு சிலையில் உள்ள இடது கால் பகுதியும் இடிந்து விழுந்து சேதமடைந்தன.
சிதம்பரம் கோவிலில் தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் சிலர் சிலைகள் சேதமடைந்து விழுந்ததை பார்த்து தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் பக்தர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இதனிடையே சிலைகள் சேதமடைந்த தகவல் அறிந்து வந்த கோயில் பொது தீட்சிதர்கள் உடைந்த சிலைகளைப் பார்வையிட்டனர். கீழே உடைந்து விழுந்த சிலைகளை ஊழியர்கள் அப்புறப்படுத்தி கோயில் மேற்கு சன்னதி வாயில் பகுதியில் பக்தர்கள் யாரும் செல்லாத வகையில் அடைத்தனர்.
கோயில் கோபுரத்தில் இருந்த சிலைகள் சேதமானதால் ஆகம விதிகளின்படி பரிகார பூஜைகள் நடத்தவும், நீதிமன்ற உத்தரவு பெற்று புதிய சிலைகள் அமைக்கவும் பொதுதீட்சிதர்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.