• Wed. May 21st, 2025

இளமையாக இருப்பது குறித்து ஸ்டாலின் புத்தகம் எழுத வேண்டும் – ராகுல் காந்தி

ஒரு அருமையான புத்தகத்தை வழங்கியதற்காக என்னுடைய மூத்த சகோதரர் மு.க.ஸ்டாலினை பாராட்டுகிறேன் என ராகுல் காந்தி பேச்சு.

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, முதல்வரின் ‘உங்களில் ஒருவன்’ புத்தகத்தை வெளியிட்டு, அந்த நிகழ்வில் உரையாற்றியுள்ளார். அவர் பேசுகையில், ஒரு அருமையான புத்தகத்தை வழங்கியதற்காக நான் என்னுடைய மூத்த சகோதரர் மு.க.ஸ்டாலினை பாராட்டுகிறேன்; அவரது வாழ்க்கை நீண்ட நெடிய போராட்டம் கொண்டது. ஸ்டாலினுக்கு எத்தனை வயது இருக்கும் என நினைக்கிறீர்கள் என்று எனது தாயாரிடம் கேட்டேன்; ஒரு 58 அல்லது 60 இருக்கும் என அவர் சொன்னார்; 69 வயது என்று சொன்னேன், அவர் கூகுளில் சர்ச் செய்து பார்த்துவிட்டுதான் ஆம் என ஒத்துக்கொண்டார். நிச்சயமாக அடுத்த புத்தகத்தில் மு.க.ஸ்டாலின் எப்படி இவ்வளவு இளமையாக இருக்கிறார் என்று எழுத வேண்டும்.

தமிழ்நாடு வருவது எனக்கு எப்போதும் எனக்கு மகிழ்ச்சி தரக்கூடியது; இதனை நான் மேலோட்டமாக சொல்லவில்லை, மனதின் அடி ஆழத்திலிருந்து சொல்கிறேன். நாடாளுமன்றத்திலிருந்து வெளியே வரும்போது தமிழன் என பத்திரிகையாளர்களிடம் கூறினேன்; பிறகு ஏன் அப்படி பேசினேன் என யோசித்தேன், எனது ரத்தம் தமிழ் மண்ணில் கலந்திருக்கிறது, நான் தமிழன் என்று சொல்லி கொள்ள அனைத்து உரிமைகளும் எனக்கு உள்ளது.

பிரதமர் பொருள் புரியாமல் தமிழ்நாட்டை பற்றி பேசுகிறார்; தமிழ் மக்களின் குரலை புரிந்துகொள்ளாமல் நான் உங்களுக்காக பேசுகிறேன் என எப்படி சொல்வீர்கள்? நீட் விலக்கு வேண்டுமென தமிழ்நாடு தொடர்ந்து கூறுவதை கேட்க மறுக்கிறீர்கள் என்றால் அவர்கள்மீது என்ன மதிப்பு வைத்துள்ளீர்கள். 3,000 ஆண்டுகளாக தமிழ் மக்களின் மீது யாரும் எதனையும் திணிக்க முடிந்ததில்லை; தமிழ் மக்களிடம் அன்போடும் அக்கறையோடும் பேசினால், அவர்களிடம் இருந்து எதையும் பெறலாம் என தெரிவித்துள்ளார்.