• Fri. Apr 26th, 2024

முதல்வர் மு.க.ஸ்டாலினின் ‘உங்களில் ஒருவன்’ சுயசரிதை.. ராகுல் காந்தி வெளியிட்டார் !!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ‘உங்களில் ஒருவன்’ சுயசரிதை புத்தகத்தை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்க்கை பயணத்தை சுயசரிதையாக எழுதியுள்ளார். அதில், தனது பள்ளி- கல்லூரி படிப்பு காலம், இளமை காலம், அரசியல் ஆர்வம், முதல் அரசியல் கூட்டம், முதல் பொதுக்கூட்ட பேச்சு, திரையுலகில் கால் தடம் பதித்தது, திருமண வாழ்க்கை, மிசா காலத்தின் தொடக்கம் என 1976-ம் ஆண்டு வரையிலான 23 ஆண்டு கால வாழ்க்கை பயண வரலாற்று சுவட்டை ‘உங்களில் ஒருவன்’ என்ற தலைப்பில் சுயசரிதை புத்தகமாக எழுதி உள்ளார்.

இந்த புத்தகத்தின் முதல் பாகம் வெளியீட்டு விழா, சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய கூட்டரங்கில் நடைபெற்றது. விழாவுக்கு தி.மு.க. பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் தலைமை தாங்கினார். ‘உங்களில் ஒருவன்’ (பாகம்-1) புத்தகத்தை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி. வெளியிட்டார்.

விழாவில், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், ஜம்மு – காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா, பீகார் மாநில எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், கவிஞர் வைரமுத்து, நடிகர் சத்யராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

புத்தகத்தின் விலை

முதல்வர் மு.க ஸ்டாலின் எழுதியுள்ள சுயசரிதை நூலான உங்களில் ஒருவன் புத்தகம் 336 பக்கங்களைக் கொண்டது. விலை 500 ரூபாய் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பூம்புகார் பதிப்பகம் இந்த நூலை வெளியிடுகிறது

பினராயி விஜயன்

தமிழர்களும், மலையாளிகளும் ஒரே மண்ணின் குழந்தைகள், நாங்கள் சகோதர, சகோதரிகள் கூட்டாட்சிக்கு ஆபத்து வரும் போது முதல் நபராக நிற்பவர் மு.க.ஸ்டாலின் என கூறினார். இளைஞரணி தலைவராக இருந்து மாநிலத் தலைவராக உயர்ந்தவர் மு.க.ஸ்டாலின் என கூறினார். படிபடியாக முதலமைச்சராக உயர்ந்தவர் ஸ்டாலின் என பேசினார்.
உமர் அப்துல்லா

எப்படி இருக்க வேண்டும். எதை சாப்பிட வேண்டும். எந்த உடை அணிய வேண்டும் என்பது பற்றி முடிவெடுப்பது அவரவரின் உரிமை. இந்துவாக காவித் துண்டு போட வேண்டுமா? பொட்டு வைக்க வேண்டுமா? அல்லது இஸ்லாமியராக ஹிஜாப் அணிய வேண்டுமா, தாடி வைக்க வேண்டுமா என்பதைப் பற்றி அவரவர்தான் முடிவு செய்ய வேண்டும். மத அடையாளங்களைப் பின்பற்றுவது தனிமனித உரிமை. ஆனால், தற்போது மொழி, மதம், ஆடை, உணவு சுதந்திரம் என்பது கேள்விக்குறியாக்கப்பட்டு வருகிறது. இந்தியா ஒற்றுமையில் வேற்றுமை நிறைந்த நாடு. மாநில அரசுகள் மத்திய அரசுக்கு கட்டுப்பட்டவை என்ற கருத்து உருவாக்கப்பட்டு வருகிறது. ஜம்மு காஷ்மீர் மக்களின் குரலை கேட்காமல் மாநிலம் பிரிக்கப்பட்டது. காஷ்மீருக்கு வந்த நிலை தமிழ்நாட்டுக்கோ, கேரளாவுக்கோ வராது என்பது என்ன நிச்சயம்? மக்களின் ஒப்புதல் இல்லாமல் ஜம்மு காஷ்மீரை பிரித்தனர். பல தலைமுறைகளை கடந்த சொந்தம் ஜம்மு காஷ்மீருக்கும் தமிழகத்திற்கும் இருக்கிறது. ஒரு ஆளுநர் தமிழகத்தை மூன்றாக பிரித்தல் ஏற்க முடியுமா?!” என்றார்.

தேஜஸ்வி யாதவ்

தமிழகத்தில் நிலவும் சமூக நீதி, ஒற்றுமையை காணும்போது மகிழ்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் உள்ளது. தமிழகத்தின் சமூக நீதிக் கொள்கையால் கவரப்பட்டு, பீஹாரில் அதனை நடைமுறைப்படுத்தியவர் எனது தந்தை லாலு பிரசாத் யாதவ். சமூக நீதி குறித்த எங்களின் பார்வைக்கு தமிழகம்தான் காரணம். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள இந்த நூலைப் படிப்பவர்கள், அவரது அரசியலைப் பற்றி புரிந்துகொள்ள முடியும். மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக தமிழகம் உள்ளது” என்றார்.

கலகலபாக்கிய சத்யராஜ்

புத்தகம் வெளியீட்டுக்கு பின்னர் நடிகர் சத்யரா விழா வாழ்த்துரை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது, தமிழ்நாட்டுக்காகவும், தமிழுக்காகவும் நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி உரையாற்றியது மெய்சிலிர்க்க வைத்தது. திராவிட கலாசாரப்படி அண்ணன், தம்பி என்றே அழைப்போம். அதன் வகையில் முதல்வர் ஸ்டாலினை அண்ணன் என்றும் ராகுல் காந்தியை தம்பி என அழைக்கிறேன் என சத்யராஜ் பேசினார்.

அப்போது இப்படிப்பட்ட முதல்வர் எங்களுக்கு கிடைக்கவில்லையே என ஆதங்கமாக கூறியிருந்தேன். ஆனால் இப்போது சிறந்த முதலமைச்சராக நம் தளபதி இருக்கிறார். இது மகிழ்ச்சியாக இருக்கிறது எனத் தெரிவித்திருந்தார்.

அதைத் தொடர்ந்து தேஜஸ்வி யாதவ், உமர் அப்துல்லா, வைரமுத்து, கனிமொழி எம்.பி உள்ளிட்ட அனைவர் குறித்தும் பேசிய சத்யராஜ், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உங்களில் ஒருவன் புத்தகத்தின் முதல் பக்கத்தை படித்தபோதே அவ்வளவு ஆர்வம் தொத்திக்கொண்டது.

முத்தமிழறிஞர் கலைஞரோடு எனக்கு நெருக்கமான பழக்கம் ஏற்பட்டது. பாலைவன ரோஜாக்கள், மண்ணின் மைந்தன் ஆகிய 2 படங்களில் அவரது வசனத்தில் நடித்திருந்தேன். கடைசிவரை தன் தந்தையை தலைவனாகவே எண்ணி வாழ்ந்திருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எனக் கூறிய சத்யராஜ் “தந்தை ஒரு தலைவன்” நல்ல டைட்டில்ல எனக் கூறினார்.

பராசக்தி படத்தின் நினைவுகளையும், மிசா காலத்து நிகழ்வுகளையும் நினைவூட்டிய சத்யராஜ், ஒரு நபரை மனிதனாக மாற்றுவது தந்தை பெரியாரின் சமூக நீதியும், காரல் மார்க்ஸின் பொருளாதார நீதியுமே ஆகும் என்றும், நாம் மனிதர்களாக இருக்க வேண்டுமென்றால் மனிதாபிமானம் தேவை எனக் கூறியிருந்தார்.

வைரமுத்து

சிந்திப்பது, செயல்படுவது, களமாடுவது ஆகியவை மு.க.ஸ்டாலினின் குணம் என புத்தக வெளியிட்டு விழாவில் வைரமுத்து பேசினார்.

கடந்த 9 மாதங்களில் தமிழ்நாட்டை இந்தியாவே அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறது என கூறினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சாதனைகளை சொல்ல ஒரு நாவு போதாது என தெரிவித்தார். இந்தியா புருவம் உயர்ந்து பார்க்கும் ராகுல் காந்தி, பினராயி விஜயன், ஒமர் அப்துல்லா, தேஜஸ்வி ஆகிய பெருமக்களால் மேடை பெருமையுடன் நிற்கிறது என பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *