• Fri. Apr 19th, 2024

நயினார் நாகேந்திரனின் பேச்சு; வருத்தம் தெரிவித்த அண்ணாமலை..!

நயினார் நாகேந்திரனின் கருத்து பாஜகவின் நிலைப்பாடு இல்லை. வார்த்தை தவறுதலாக வந்துவிட்டது. இதுகுறித்து எடப்பாடி பழனிசாமியிடம் தொடர்புகொண்டு வருத்தம் தெரிவித்துள்ளேன் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்..

பாஜக சார்பில் நேற்று வள்ளுவர் கோட்டத்தில் அரியலூர் மாணவி தற்கொலை வழக்கில் நீதி வேண்டி உண்ணாவிரதம் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டமானது பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற நிலையில், இதில் பாஜக மூத்த தலைவர்கள், எச்.ராஜா, பொன் ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த போராட்டத்தில் பேசிய நயினார் நாகேந்திரன் பேசுகையில், தமிழ்நாட்டில் அதிமுக எதிர்கட்சியியாக செயல்படவில்லை. பாஜக எதிர்க்கட்சியாக இல்லை என்றாலும் கூட துணிந்து கேள்வி கேட்கிறது. சட்டமன்றத்தில் ஆண்மையோடு பேச அதிமுகவில் ஒரு எம்எல்ஏ கூட இல்லை. அதிமுக மக்கள் பிரச்சினையை சட்டமன்றத்தில் எப்போதுமே பேசுவதில்லை என்று தெரிவித்திருந்தார்.

இவரது இந்த பேச்சு சர்ச்சையான நிலையில், இதற்கு அதிமுக தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அப்போது பேசிய அவர், நயினார் நாகேந்திரனின் கருத்து பாஜகவின் நிலைப்பாடு இல்லை. வார்த்தை தவறுதலாக வந்துவிட்டது. இதுகுறித்து எடப்பாடி பழனிசாமியிடம் தொடர்புகொண்டு வருத்தம் தெரிவித்துள்ளேன். அதிமுக எதிர்க்கட்சியாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பொங்கல் பரிசு தொகுப்பு விவகாரத்தில் சிறப்பாக போராடி வருகிறது என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *