புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதி செல்லுகுடி , பெருஞ்சுணை பகுதிகளைச் சேர்ந்த ஆண்கள் பெண்கள் என 35 பேர் பரம்பூர் பகுதியில் நடக்கும் உறவினர்கள் காதணி விழாவிற்குப் போய்விட்டுத் திரும்பி வரும்போது சீகம்பட்டி என்ற இடத்தில் மினி லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் வெள்ளைச்சாமி என்ற 55 வயது முதியவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

புதுக்கோட்டை மாவட்டம் பரம்பூர் என்ற கிராமத்தில் இன்று காதணி விழா ஒன்று நடைபெற்றது. அந்த விழாவிற்காக புதுக்கோட்டை அருகே உள்ள செல்லுகுடி என்ற கிராமத்தைச் சேர்ந்த உறவினர்கள் மினி லாரியில் ஏறிச் சென்று இருக்கிறார்கள். அந்த லாரி திரும்பி வரும்போது சீகம்பட்டி என்ற இடத்தில் விபத்துக்குள்ளாகி இருக்கிறது. அதில் வெள்ளைச்சாமி என்ற நபர் இறந்து விட்டார். காயமடைந்த பலரும் துடித்துக் கொண்டிருந்தனர்.

அதே சமயம் அந்த பகுதியில் தனது காரில் சென்று கொண்டிருந்த முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து வந்து முதலுதவி செய்து காயம் அடைந்த 35 நபர்களையும் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். பின்னர் நேரில் சென்று காயமடைந்த அனைவரையும் சந்தித்து நலம் விசாரித்து ஆறுதல் தெரிவித்தார். இது குறித்து உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என மருத்துவர்களிடம் கேட்டுக்கொண்டார்.

இதுகுறித்து அன்னவாசல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். காயம் அடைந்தவர்களில் இருபதுக்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனைகளிலும் மற்றவர்கள் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அனைவருக்கும் உரிய சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவர்களில் 14 வயதுடைய நவநீதன் என்ற இளைஞரும் 40 வயதுடைய கவிதா என்ற பெண்மணியும் உயிருக்கு ஆபத்தான நிலையில் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். சிலர் திருச்சி மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.




