• Wed. May 6th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

அறிவியல் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி

Byவிஷா

Dec 2, 2024

கிராமப்புற பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் அறிவியல் திறனை மேம்படுத்தும் வகையில், அறிவியல் ஆசிரியர்களுக்கு 5 நாட்கள் சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
மாணவர்கள் தலை சிறந்தவர்களாக திகழ்வதில் ஆசிரியர்களின் பங்கு முக்கியமானது. மாணவர்களை நல்வழிப்படுத்தி உயர்ந்த இடத்தை பிடிப்பதில் ஆசிரியர்கள் தான் ஆணி வேராக உள்ளனர். அந்த வகையில் பள்ளி மாணவர்களுக்கு கல்வி வளர்ச்சியை மேம்படுத்த பல திட்டங்களை தமிழக பள்ளிக்கல்வித்துறை செயல்படுத்தி வருகிறது. மேலும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு நவீன கற்றல் – கற்பித்தல் முறைகளை மேம்படுத்த டேப்லெட் வழங்கும் திட்டத்தை அரசு செயல்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் 33ஆயிரம் பள்ளிகள் இயங்கி வருகிறது. மேலும் தனியார் பள்ளிகளுக்கு இணையாக நவீன முறையில் பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மாணவர்கள் பாடங்களை எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் வகுப்பறைகளில் ‘ஸ்மார்ட் வகுப்பறைகள்’ அமைக்கப்பட்டு கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது.
இதன் மூலம் வீடியோவாக பாடங்கள் நடத்துவதால் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கும் முறையில் ஆர்வத்தை தூண்டும் வகையில் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் மாணவர்களின் வருகை பதிவேடு, மாணவர்களின் மதிப்பெண்கள் தகவல்கள், ஆசிரியர்களின் வருகை, கற்பித்தல் தொடர்பான அனைத்து பணிகளையும் எமிஸ் எனப்படும் ஆன்லைன் செயலியில் பதவியேற்றம் செய்யப்பட்டு வருகிறது.
இதற்காக ஆசிரியர்களுக்கு கையடக்கக் கணினி (டேப்லெட்) வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்திருந்தது. இந்த சூழ்நிலையில் கிராமப்புற பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் அறிவியல் திறனை ஊக்குவிக்கும் வகையில் புதுமையான கற்பித்தல் முறைகளை மேற்கொள்ள ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி மாணவர்களுக்கு அறிவியல் பாடம் கற்பிக்கும் 500 ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான அறிவியல் பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு 5 நாட்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்பட இருக்கிறது. இந்த பயிற்சியின் மூலம் எதிர்காலத்தில் மாணவர்கள் அறிவியல் துறையில் ஆர்வத்தை அதிகரிக்கவும் பணியை தேர்வு செய்யவும் வாய்ப்பாக அமைந்துள்ளது.