• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

உலக நன்மைக்காக சிறப்பு துஆ செய்து வழிபாடு..,

ByKalamegam Viswanathan

Mar 31, 2025

இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்று ரமலான் மாத நோன்பாகும். அதனடிப்படையில் ரமலான் மாதத்தில் அதிகாலை முதல் மாலை வரை உணவு உண்ணாமல், நீர் அருந்தாமல் இஸ்லாமியர்கள் நோன்பினை கடைபிடிப்பார்கள். ரமலான் மாதம் முதல்நாள் தொடங்கி தொடர்ச்சியாக 30நாட்களும் நோன்பினை கடைபிடிக்கும் இஸ்லாமியர்கள் மற்றொரு கடமையான ஏழை எளியோருக்கு ஜகாத் என்னும் உதவிகளை வழங்கிவருவார்கள்.

ரமலான் 30 நோன்பு முடிவடைந்த பின்னர் ஷவ்வால் மாதத்தின் முதல் நாளில் ரமலான் பண்டிகையாக கொண்டாடுவர்.

இதற்காக அதிகாலையில் தொழுகை முடித்த பின்னர் புத்தாடை அணிந்து ஈதுல் பித்ர் என்னும் பெருநாள் சிறப்பு தொழுகையில் கலந்துகொள்வர்.

பெருநாள் சிறப்பு தொழுகையை திறந்தவெளி திடல்களில் தொழுவது கூடுதல் சிறப்பு என்பதால் பல்வேறு பகுதிகளில் திடல்களிலும், பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெறும். தொழுகைக்கு செல்வதற்கு முன்பாக ஏதாவது ஒரு ஏழைக்கு உதவி செய்ய்வேண்டும் அடிப்படையில் பித்ர் என்னும் உதவியை வழங்கிவிட்டு தொழுகையில் ஈடுபடுவர்.

அதனடிப்படையில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாநகர் எல்லிஸ்நகர் பகுதியில் உள்ள திடலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் சார்பில் ரமலான் சிறப்பு தொழுகையில் நடைபெற்றது. திடல் பகுதியில் நடைபெற்ற இந்த சிறப்பு தொழுகையில் பெண்கள், சிறுவர்கள், ஆண்கள் என ஆயிரக்கணக்காணோர் கலந்துகொண்டனர்.

இதேபோல், தமுக்கம், மீனாம்பாள்புரம், நெல்பேட்டை, வில்லாபுரம் திருமங்கலம், மேலூர் ஆகிய பகுதிகளில் உள்ள திடல்களில் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் சார்பில் ஏராளமான இஸ்லாமியர்கள் பெருநாள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

மதுரை மாநகரில் உள்ள மஹபுப்பாளையம், வில்லாபுரம், நெல்பேட்டை, ஹாஜிமார்தெரு, தமுக்கம் மைதானம், அதனை தொடர்ந்து புறநகர் பகுதியான திருப்பரங்குன்றம், கலைநகர், வள்ளுவர்காலனி, சிலைமான், உசிலம்பட்டி, அலங்காநல்லூர், சோழவந்தான் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் உள்ள பள்ளிவாசல்களிலும் பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பெருநாள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

இதில் பெரும்திரளான குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என அனைத்து தரப்பு இஸ்லாமிய பெருமக்களும் கலந்துகொண்டு பிராத்தனையில் ஈடுபட்டனர்.

பெருநாள் தொழுகை முடிந்து இஸ்லாமியர்கள் ஒருவொருக்கொருவர் கைகொடுத்தும், ஆரத்தழுவியும் ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர்.
சிறப்பு தொழுகையின் முடிவில் உலக அமைதிபெற வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும், பேரிடர்கள் நீங்க வேண்டும் சிறப்பு துஆ செய்து வழிபாடு நடத்தினர்.