• Fri. Apr 26th, 2024

ஷங்கர் படத்தில் வில்லனாகும் எஸ்.ஜே.சூர்யா?

பிரபல இயக்குநர் ஷங்கர் இயக்கும் திரைப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஷங்கர் இயக்கத்தில், ராம்சரண், கியாரா அத்வானி மற்றும் பலர் நடிக்கும் திரைப்படம் RC15. ராம்சரணின் 15வது திரைப்படம் என்பதால் இப்படத்திற்கு தற்காலிகமாக RC15 என பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 8ம் தேதியிலிருந்து ஆந்திரா மாநிலம் ராஜமுந்திரியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தின் முக்கியமான சில காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இத்திரைப்படத்தில், எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது. வாலி, குஷி, நியூ போன்ற வித்தியாசமான சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்த எஸ்.ஜே.சூர்யா, நியூ திரைப்படத்தில் ஹீரோவாக தனது அறிமுகத்தை கொடுத்தார். மேலும், மகேஷ்பாபுவின் ஸ்பைடர் படத்தில் சைக்கோ வில்லனாக மிரட்டி இருந்தார்.

சிம்புவின் மாநாடு படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் வில்லத்தனம் மிகவும் பாராட்டும் வகையில் இருந்தது. அப்படத்தில், மாஸான வசனத்தை பேசி தெறிக்கவிட்டு இருப்பார். இந்த திரைப்படத்தை அடுத்து எஸ்.ஜே. சூர்யாவுக்கு வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு குவிந்து வருகிறது.

இந்நிலையில், எஸ்.ஜே. சூர்யா RC15 திரைப்படத்தில் வில்லனாக நடிக்க 7 கோடி ரூபாய் சம்பளம் கேட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன. தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் இப்படத்தின் அடுத்த கட்டபடப்பிடிப்பில் எஸ்.ஜே. சூர்யா கலந்து கொள்ள உள்ளார்.

ராம்சரண் நடித்து முடித்துள்ள ஆர்ஆர்ஆர் படம் மார்ச் 25ம் தேதி வெளியாக உள்ளது. அந்தப் படத்தின் வெளியீட்டின் போது மீண்டும் அப்படத்திற்கான சில பிரமோஷன்களைச் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதால், ஆர்ஆர்ஆர் படத்தின் ரிலீஸுக்கு பிறகே RC15 படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தொடங்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *