மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே உள்ள குருவித்துறை குருபகவான் கோவிலில் குருபெயர்ச்சியை முன்னிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.
மதுரை மாவட்டம் குருவித்துறை பழமைவாய்ந்த வல்பவ பெருமாள் கோவில் குருபெயர்ச்சியை முன்னிட்டு வரும் ஏப். 22ல் இரவு 11:24 மணிக்கு மேல் குருபகவான் மீன ராசியில் இருந்து மேஷராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இதனால் ஏப். 20 காலை 10: 45 முதல் ஏப். 22 மதியம் 2: 00 மணி வரை இலட்சார்ச்சனை நடைபெறும். இரவு 9:00 முதல் 11:24 மணி வரை குருப்பெயர்ச்சி சிறப்பு பரிகாரப் பூஜைகள் மற்றும், திருமஞ்சன சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. இதனால் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும் என்பதால் பாதுகாப்பு, போக்குவரத்து குறித்து தாசில்தார் வீரபத்திரன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் ஊராட்சி தலைவர் ரம்யா, செயல் அலுவலர் பாலமுருகன், கணக்கர் நாகராஜ், அர்ச்சகர் பாலாஜி உட்பட பலர் கலந்து கொண்டனர்.