ராமேஸ்வரம், மண்டபம், பாம்பன், தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளில் வழக்கத்தைவிட காற்றின் வேகம் அதிகரித்து கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. இதனால் ராமேஸ்வரம் பகுதியில் உள்ள மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரித்தனர்.

மன்னார் வளைகுடா, லட்சத்தீவு கடல் பகுதியில் வழக்கத்தைவிட 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால் ராமேஸ்வரம், மண்டபம் மற்றும் தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதியில், கடந்த சில நாட்களாக வழக்கத்தை விட கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.
இந்நிலையில், ராமேஸ்வரத்தில் 50 மீட்டர் தொலைவிற்கு கடல் நீர் உள்வாங்கியுள்ளது, இதனால் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கபட்ட படகுகள் தரைதட்டி நிற்கிறது. படகுகளை மீட்கும் பணியில் மீனவர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். மேலும் 50 மீட்டர் தொலைவிற்கு கடல் நீர் உள்வாங்கியதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். ராமேசுவரம், மண்டபம், பாம்பன், தனுஷ்கோடி, பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரித்து கடல் கொந்தளிப்புடன் உள்ளது.