ஒடிஷா மாநிலம், பூரி கடற்கரையில் 2 டன் எடையுள்ள வெங்காயங்களைக் கொண்டு கிறிஸ்துமஸ் தாத்தாவினை மணற்சிற்பக் கலைஞர் உருவாக்கியுள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
கிறிஸ்துமஸ் பண்டிகையை உலகமே கொண்டாடிவரும் வேலையில், மணல் சிற்பக்கலைஞர் சுதர்சன் உலக சாதனை படைக்க எண்ணியுள்ளார். இதனையடுத்து, 2 டன் பல்லாரி வெங்காயம் கொண்டு கிறிஸ்துமஸ் தாத்தா எனப்படும் சாண்டா க்ளாஸின் தோற்றத்தை வடிவமைத்துள்ளார்.
சுமார் 2 டன் வெங்காயம் கொண்டு 100 அடி நீளம், 20 அடி உயரம், 40 அடி அகலத்தில் உருவாக்கப்பட்ட சாண்டா க்ளாஸ் முயற்சிக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில், இந்திய உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்று சாதனை படைத்துள்ளார் ஒடிஷா மாநிலத்தில் உள்ள பூரியை சேர்ந்த பிரபல மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக். தலைவர்களின் பிறந்தநாள், நினைவு நாள் மற்றும் பண்டிகை கொண்டாட்டங்களை முன்னிட்டு அவர் மணலில் சிற்பம் வடித்து மக்களின் கவனத்தை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கிறிஸ்துமஸ் தாத்தா வடிவமைப்பு குறித்து சுதர்சன் பட்நாயக் கூறுகையில், ”ஒவ்வொரு ஆண்டும், கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது, பூரி கடற்கரையில் சில வித்தியாசமான சிற்பங்களை உருவாக்க முயற்சிக்கிறோம். இந்த முறை வெங்காயம் மற்றும் மணலைக் காணெ;டு, 100 அடி நீளம், 20 அடி உயரம் மற்றும் 40 அடி அகலம் கொண்ட உலகின் மிகப்பெரிய கிறிஸ்துமஸ் தாத்தாவை உருவாக்கியுள்ளோம். இதற்காக இரண்டு டன் வெங்காயம் பயன்படுத்தப்பட்டது. மேலும், ‘மரக்கன்றை பரிசளிப்பீர், பூமியை பசுமையாக்குவீர்’ என்ற செய்தியை இதன் மூலம் உலகக்கு உணர்த்துகிறோம்.
பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தை நாம் அனைவரும் அறிவோம். அதிக மரக்கன்றுகளை நட வேண்டியதுதான் தற்போதைய தேவை. கிறிஸ்துமஸ் தாத்தா சிற்பத்தை வடிவமைத்து முடிக்க 8 மணி நேரமானது. உலகத்தினர் கிறிஸ்துமஸை கொண்டாடும் வேளையில், இந்தியாவில் வெங்காயம், மணலால் வடிவமைக்கப்பட்ட கிறிஸ்துமஸ் தாத்தா சிற்பத்தை காண்பர்’’ என்றார்.