மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலையின் கிழக்குப் பகுதியில் புதிய படிக்கட்டுகளின் பாதை வளாகத்தில் மலை சார்ந்து அடிவாரத்தில் 100-க்கும் மேற்பட்ட பனை மரங்கள் வளர்ந்து உள்ளன.

இந்தப் பகுதியில் நேற்று மாலையில் திடீரென்று “தீ” பிடித்து மளமளவென எரிந்தது. மேலும் அதன் புகையானது மலை முழுவதுமாக பரவி புகை மண்டலமானது. இதே சமயம் பனை மரத்தின் அடிப்பகுதியில் கிடந்த சருகுகள் எரிந்து சாம்பலானது.
மேலும் “தீ” பரவியதால் பனை மரங்கள் கருகின. இது தொடர்பாக தகவல் அறிந்த திருப்பரங்குன்றம் தீயணைப்பு மற்றும் பேரிடர் தடுப்பு குழு நிலைய அதிகாரி உ. உதயக்குமார் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று சில மணி நேரம் போராடி தீயணைத்தனர்.

இந்த நிலையில் திருப்பரங்குன்றம் போலீசார் விரைந்து வந்து திடீரென்று தீப்பிடிக்க காரணம் என்ன? கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கமானது மலை பாறையில் வெப்பத்தால் சருகுகளில் தீப்பிடித்து எரிந்ததா? அல்லது வழிப்போக்கர்கள் சருகுகளில் “தீ” வைத்து விட்டார்களா? அல்லது சிகரெட் பிடித்து அதை அணைக்காமல் சென்றதால் சருகுகளில் “தீ” பிடித்து எரிந்ததா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.




