குஜராத்தை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வரும் அதானி குழுமம், இதுவரை இந்தியாவில் முந்த்ரா, தாஹேஜ், காண்ட்லா, ஹஸிரா, தம்ரா, மர்மகோவா, விசாகப்பட் டினம் என 7 துறை முகங்களை நிர்வகித்து வருகிறது.
தற்போது, தமிழகத்தில் எல் அண்ட் டி நிறுவனம் உருவாக்கி நிர்வகித்து வந்த காட்டுப்பள்ளி துறைமுகத்தை கடந்த 2018ம் ஆண்டு 97 சதவித பங்குகளை வாங்கியது அதானி குழுமம்.
எண்ணூர் துறைமுகத்தை ஒட்டி அமைந்துள்ள இது ஆழ்கடல் துறைமுகங்களுள் ஒன்று. இங்குள்ள சரக்குப் பெட்டக முனையம் கடந்த 2013-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இதில் 2 பெர்த்கள் உள்ளன. இவற்றின் நீளம் 710 மீட்டராகும். இந்த பெர்த்களில் சரக்குப் பெட்டகங்கள் மற்றும் சரக்குகளைக் கையாளும் திறன் பெற்ற 6 கிரேன்கள் உள்ளன.
காட்டுப்பள்ளி துறைமுகத்தை ரூ. 4,000 கோடி முதலீட்டில் 30 பெர்த் கொண்ட துறைமுகமாக விரிவுபடுத்தவும், 30 ஆண்டுகள் முதல் 99 ஆண்டுகள் வரை நிர்வகிக்க சலுகை பெறவும் வேண்டி தமிழக அரசிடம் அந்நிறுவனம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அதானி குழுமத்தின் இந்த கோரிக்கையை ஏற்க கூடாது என்று கூறி 10 பேர் கொண்ட ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் அதானி போர்ட்ஸ் மற்றும் SEZ திட்டத்திற்கு எதிராக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளனர். மேலும், சலுகைக் காலத்தை நீட்டிக்க கேரள அரசுக்கு எதிரான சிஏஜி -யின் (இந்தியாவின் கட்டுப்பாட்டாளர் மற்றும் தணிக்கையாளர் ஜெனரல்) வலுவான கருத்துக்களை சுட்டிக்காட்டியுள்ளனர்.